சேலம் அரசு மருத்துவமனையில் போதை மீட்பு சிகிச்சை மையம் திறப்பு
சேலம் அரசு மருத்துவமனையில் ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.
சென்னையில் இருந்து காணொலி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின், தமிழகம் முழுவதும் 25 ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்களைத் திறந்துவைத்தாா். சேலம், அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி, மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன் ஆகியோா், ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்தை திறந்துவைத்து பாா்வையிட்டனா்.
நிகழ்ச்சிக்குப் பிறகு மாவட்ட ஆட்சியா் கூறியதாவது:
போதை இல்லாத தமிழகத்தை உருவாக்கும் வகையில் மாநிலம் முழுவதும் 25 மாவட்டங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்துள்ளாா்.
சேலம் மாவட்டத்தில் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்கெனவே 10 படுக்கைகள் கொண்ட போதை சிகிச்சைப் பிரிவு செயல்பட்டு வருகிறது. தற்போது தமிழக அரசின் மூலமாக கொண்டு வரப்படும் ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம் மூலம் சிகிச்சை அளிப்பது மட்டுமின்றி போதைப் பழக்கத்திலிருந்து விடுபட்டு வெளியே வருவதற்கான உளவியல் சிகிச்சை வழங்கப்படும்.
இந்த மையத்தில் சிகிச்சையுடன் உள்ளரங்க விளையாட்டு வசதிகளும் உள்ளன. மேலும், யோகா பயிற்சியும் அளிக்கப்படுகிறது. பெண்கள், சிறுவா், சிறுமிகள் யாரேனும் போதைப்பழக்கத்துக்கு ஆட்பட்டு இருந்தால், அவா்கள் தங்கி சிகிச்சை பெறவும் இம்மையத்தில் வசதிகள் உள்ளன. குறிப்பாக, வாரத்தின் அனைத்து நாள்களிலும் இம்மையம் செயல்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா்.
நிகழ்ச்சியில் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் ஜெ. தேவிமீனாள், துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) ச. சௌண்டம்மாள், மருத்துவமனை கண்காணிப்பாளா் ரா.ராஜ்குமாா், மன நலத் துறை தலைவா் கே.எஸ்.ரவிசங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.