SIR: ``இதைத் தவிர வேறு வழியில்லை'' - அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் தீர்மானம் என்...
'தகுதிச்சான்றிதழ் பெற ரூ.20 லட்சம் லஞ்சம்' - பச்சையப்பன் கல்லூரி பேராசிரியர் சஸ்பெண்ட்
பச்சையப்பன் கல்லூரியின் வரலாற்றுத் துறையைச் சேர்ந்த பேராசிரியர் ஆர். சரவணன் என்பவர் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். சக வரலாற்றுத்துறை பேராசரியரான வெங்கடேசன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கல்லூரி தரப்பில் விசாரிக்கையில், 'வரலாற்றுத்துறையில் துணை பேராசிரியராக பணி செய்து வரும் வெங்கடேசன் என்பவர் பணி நிரந்தரம் பெறுவதற்கு மெட்ராஸ் யூனிவர்சிட்டியிடம் தகுதிச்சான்றிதழும் உயர்கல்வித்துறையின் அனுமதிக்கடிதமும் தேவை.
அந்த இரண்டையும் தான் பெற்று தருவதாகவும் அதற்கு ஈடாக 20 லட்ச ரூபாயை லஞ்சமாகக் கொடுக்க வேண்டுமென்று சரவணன் கேட்டிருக்கிறார். மேலும், அப்படி பணத்தை கொடுக்கவில்லையெனில் உன்னுடைய வேலை பறிபோகும், நிம்மதியாக வேலை செய்ய முடியாது என வெங்கடேசனையும் மிரட்டியிருக்கிறார்.

வெங்கடேசன் கொடுத்த புகாரின் அடிப்படையில் சரவணனை அழைத்து விசாரிக்கையில் அவர் அளித்த பதில் திருப்திகரமாக இல்லை என்பதால் அவரை உடனடியாக இடைநீக்கம் செய்திருக்கிறோம். மேலும், இந்த விவகாரத்தில் மாவட்ட நீதிபதி ஒருவரின் தலைமையில் விசாரணையும் நடத்தவிருக்கிறோம். விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருக்கும் இந்த சரவணன் மீது ஏற்கெனவே நிறைய புகார்கள் உள்ளன. ஏற்கெனவே இரண்டு முறை சஸ்பெண்ட்டும் செய்யப்பட்டிருக்கிறார்.' என்றனர்.














