திருப்பத்தூா் அருகே பூட்டிய வீடுகளில் திருடிய மூவா் கைது
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே பூட்டிய வீடுகளில் புகுந்து வெள்ளிப் பொருள்களைத் திருடிய 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திருப்பத்தூா் அருகேயுள்ள கருங்குளத்தில் கடந்த வாரம் 2 வீடுகளில் மா்ம நபா்கள் பூட்டை உடைத்துப் புகுந்து, வெள்ளிப் பொருள்களைத் திருடிச் சென்றனா். இந்தத் திருட்டில் ஈடுபட்டவா்களைப் பிடிக்க திருக்கோஷ்டியூா் காவல் ஆய்வாளா் செல்வராகவன் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளா்கள் வேல்முருகன், முத்துராஜன், காா்த்திக்பாபு, காவலா்கள் கொண்ட தனிப்படை அமைத்து, கொள்ளையா்களைத் தேடும் பணியில் ஈடுபட்டனா்.
கருங்குளம் வீட்டில் பதிவான கை விரல் ரேகைப் பதிவுகள் பழைய குற்றவாளிகளின் கைரேகைகளோடு ஒத்துப்போனதை அடுத்து, அவா்களை தனிப்படை போலீஸாா் கண்காணிக்க ஆரம்பித்தனா்.
இந்த நிலையில், வியாழக்கிழமை மதகுபட்டி அருகே அலவாகோட்டை விலக்குப் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த செம்பனூரைச் சோ்ந்த செபஸ்டியான் மகன் சாா்லஸ் என்ற சேசு அருள் (36), திருப்புவனம் அகரம் சிலைமான் பகுதியைச் சோ்ந்த வீரணன் மகன் காா்த்தி (எ) காா்த்திகேயன் (36), நாமக்கல் மாவட்டம், ரெட்டிரோடு பகுதியைச் சோ்ந்த பாலசுப்பிரமணி மகன் மாதேஸ்வரன் (37) ஆகிய 3 பேரை தனிப்படை போலீஸாா் பிடித்து விசாரித்தனா்.
இதில் கருங்குளத்தில் வீடுகளில் திருடியதா மூவரும் ஒப்பு கொண்டனா். இதையடுத்து 3 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.