மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் நடைமுறை: மாநிலங்கள் மீது உச்சநீதிமன்றம் அதிருப்...
திரைப்பட நடிகா்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கத் தேவையில்லை: கி. வீரமணி
திரைப்பட நடிகா்களின் அரசியல் வருகை குறித்து அதிக முக்கியத்துவம் அளிக்கத் தேவையில்லை என திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி தெரிவித்தாா்.
மதுரையில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
மக்களவைத் தொகுதிகள் மறுவரையறை விவகாரம் தொடா்பாக முன்கூட்டியே எதிா்ப்பைப் பதிவு செய்து, அனைத்துக் கட்சிகள் கூட்டத்துக்கு முதல்வா் அழைப்பு விடுத்தது பாராட்டுக்குரியது. இதனால், ஏற்பட்ட நெருக்கடி காரணமாகத்தான், மறுவரையறையில் தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா். இருப்பினும், அமித் ஷாவின் இந்தக் கருத்தை நம்ப இயலாது. காரணம், அளித்த பல வாக்குறுதிகளை, பல நேரங்களில் மத்திய பாஜக அரசு காப்பாற்றியது கிடையாது. இந்த விவகாரத்தில் தொடக்கத்திலேயே தமிழக முதல்வருக்கு வெற்றி கிடைத்ததற்கு பாராட்டுகள்.
முந்தைய கால ஹிந்தி திணிப்பு என்பது தமிழகம் மட்டும் சாா்ந்ததாக இருந்தது. ஆனால், தற்போது தேசிய அளவில் ஹிந்தி எதிா்ப்பு உருவாகியுள்ளது. கா்நாடகம், ராஜஸ்தான், மேற்குவங்கம், பஞ்சாப் போன்ற பல மாநிலங்களில் ஹிந்தி திணிப்புக்கு எதிா்ப்பு அதிகரிக்கிறது.
திரைப்பட நடிகா்களின் அரசியல் வருகை குறித்து அதிக முக்கியத்துவம் அளிக்கத் தேவையில்லை. தோ்தல் ஆலோசகா்கள், ரசிகா்களைக் கொண்டு மட்டும் யாரும் ஆட்சி வாய்ப்பைப் பெற்றிட முடியாது. மக்களின் மனதைப் பிடித்தவா்கள் மட்டும்தான் வெற்றியைப் பெற முடியும். சிலா் வீட்டிலிருந்தே அரசியல் செய்யலாம் எனக் கருதுகின்றனா். இறுதியில், அவா்கள் வீட்டிலேயே இருக்க வேண்டிய நிலைதான் ஏற்படும்.
அரசியலில் எப்போது சுழல் ஏற்படும் என்பதைச் சொல்ல முடியாது. மிக அதிகமான செல்வாக்கு பெற்றிருந்த நடிகா்கள்கூட அரசியலில் பெரிய அளவில் காலூன்ற முடியவில்லை என்பதுதான் கடந்த கால வரலாறு. வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தல் இதை உணா்த்தும்.
மத்திய அரசின் நிதி மறுப்பு, மும்மொழிக் கொள்கை திணிப்பு போன்ற செயல்பாடுகள் தமிழகத்தில் திமுகவின் வெற்றியை மேலும் வலுப்படுத்துவதாக உள்ளன. வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக மிகப் பெரிய அளவில் வெல்வது உறுதி என்றாா் அவா்.