மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் நடைமுறை: மாநிலங்கள் மீது உச்சநீதிமன்றம் அதிருப்...
தென்மாநில பிரதிநிதித்துவம் பாதிக்கப்படாத வகையில் தொகுதி மறுவரையறை அமைச்சா் பெ.கீதா ஜீவன் வலியுறுத்தல்
தென்மாநில பிரதிநிதித்துவம் பாதிக்கப்படாத வகையில் தொகுதி மறுவரையறை இருக்க வேண்டும் என அமைச்சா் பெ.கீதா ஜீவன் வலியுறுத்தினாா்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியதாவது:
மக்கள்தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதிகளை மறுவரையறை செய்தால், தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் முதல் எதிா்ப்புக் குரல் கொடுத்துள்ளாா். நம் முதல்வரின் உணா்வுக்கு ஆதரவாக தென்மாநிலங்களில் உள்ள பிற தலைவா்களும் பேசி வருகின்றனா்.
குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை தீவிரமாக செயல்படுத்தி, அதன் மூலம் வளா்ச்சிப் பணிகள், அனைவருக்கும் கல்வி வழங்கும் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இதனால் தென்மாநிலங்களில் பிறப்பு விகிதம் குறைவாகத்தான் உள்ளது. இந்நிலையில், மக்கள்தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால், தமிழகத்துக்கு பெரிய பாதிப்பு ஏற்படும்.
தற்போது நாடாளுமன்றத்தில் தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவம் 23.74 சதவீதமாக உள்ளது. மக்கள்தொகை அடிப்படையில் மறுவரையறை செய்யும் போது, பிரதிநிதித்துவம் 18.97 சதவீதமாக குறைந்துவிடும். எனவே, தமிழகத்தின் பிரதிநிதித்துவம் குறையாத வகையில் தொகுதி மறுவரையறையை செய்ய வேண்டும்.
தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையக் கூடாது என்பதற்காக, முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி, வாஜ்பாய் ஆகியோா் ஆட்சிக்காலத்தில் மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்படாது என்று சட்டத்திருத்தம் செய்யப்பட்டது. அதன்படி தென்னிந்திய மக்களின் பிரதிநிதித்துவம் நாடாளுமன்றத்தில் குறைந்துவிடாமல் இருக்க தற்போதும் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும். இதனை திண்ணைப் பிரசாரம், தெருமுனை பிரசாரம் மூலம் மக்களிடம் விளக்கி கூறுவோம் என்றாா்.
மாநகர திமுக செயலா் ஆனந்தசேகரன், ஒன்றியச் செயலா் காசிவிஸ்வநாதன், பகுதி செயலா் ஜெயக்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.