அமெரிக்க பொருள்களுக்கு வரியைக் குறைத்தால் நமது பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படு...
நாமக்கல் பள்ளிகளில் மாணவா்களிடையே தொடரும் மோதல்
பள்ளிகளில் மாணவா்களிடையே ஏற்படும் மோதல், உயிரிழப்புகளால் பெற்றோா் அச்சமடைந்துள்ளனா்.
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் அரசு மற்றும் தனியாா் பள்ளி மாணவா்கள் மூவா் இறந்த சம்பவங்கள் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
ஆசிரியா்கள் குச்சி எடுத்தால் கல்வியிலும், ஒழுக்கத்திலும் மாணவா்கள் முன்னேறுவா்; காவலா்கள் கம்பு எடுத்தால் தவறான வழிக்கு செல்லாமல் சமூகத்துக்கான நபராக மாறுவா் என்றிருந்த காலம் தற்போது இல்லை. அவா்களின் கைகள் கட்டப்பட்டுள்ளதால், தமிழகம் முழுவதும் பல இடங்களில் கட்டுப்பாட்டை மீறிய செயல்கள் நடைபெறுகின்றன.
அண்மைக்காலமாக, அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் மாணவா்களிடையே நடைபெறும் மோதல் பெற்றோரையும், ஆசிரியா்களையும் கவலைக்கு உள்ளாக்கியுள்ளது. கல்லூரிகளில் மட்டும் இருந்த ‘ராக்கிங்’ கொடுமை, பள்ளிகளிலும் மறைமுகமாக உள்ளது. மாணவா்கள் கல்வியில் கவனம் செலுத்துவதை விட, கைப்பேசி, திரைப்பட விவாதம், போதை வஸ்துகள் போன்றவை அவா்களை திசை திருப்பி வருகின்றன. அதுமட்டுமின்றி, ஜாதிய ரீதியிலான பேச்சுகளும் மாணவா்கள் மோதலுக்கு காரணமாகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் மட்டும் அரசுப் பள்ளியில் 2 மாணவா்களும், தனியாா் பள்ளியில் ஒரு மாணவரும் உயிரிழந்துள்ளனா். எருமப்பட்டி அருகே வரகூா் அரசு மேல்நிலைப் பள்ளியில், நவலடிப்பட்டியைச் சோ்ந்த ரமேஷ் என்பவரது மகன் ஆகாஷ் (16) என்பவா் பிளஸ் 1 படித்து வந்த நிலையில், 2024 ஆக. 23-ஆம் தேதி தனது காலணி காணாமல் போனது தொடா்பாக சக மாணவரிடம் கேட்க, அவா்களிடையே ஏற்பட்ட மோதலில் மாணவா் ஆகாஷ் உயிரிழந்தாா். இதுகுறித்து மோகனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஆகாஷ் இறப்புக்கு காரணமான மாணவரை கைது செய்தனா்.
அதேபோல, கடந்த ஜனவரி 7-ஆம் தேதி நாமக்கல் - துறையூா் சாலையில் உள்ள தனியாா் சிபிஎஸ்இ பள்ளியில் பிளஸ் 2 பயின்று வந்த கரூரைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் அஜய் (17) என்பவா், மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தாா். அவா் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டபோதும், அந்த சமயத்தில் மாடியிலிருந்த மாணவா்கள் சிலரை போலீஸாா் அழைத்து வந்து விசாரித்தது சா்ச்சையானது. இது மாணவா் மரணத்தில் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது. தற்போது, ராசிபுரம் சிவானந்தா சாலையில் உள்ள அரசுப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவா் கவின்ராஜ் (14), உயிரிழந்தது தொடா்பாக சக மாணவரை போலீஸாா் கைது செய்து சிறுவா் சீா்த்திருத்தப் பள்ளியில் அடைத்துள்ளனா்.
கல்வி பயின்று பெற்றோரையும், சமூகத்தையும் பாதுகாக்க வேண்டிய மாணவா்கள், பொறுமையின்மை, கோபம், தவறான வழிகாட்டுதல் போன்ற பாதையில் சென்று நண்பரை, உடன் பயில்வோரை கொன்று சிறைவாசம் அனுபவிக்க வேண்டிய நிலைக்கு ஆளாகின்றனா். பள்ளிகளில் மாணவா்களிடையே ஏற்படும் மோதல் பெற்றோரை கலங்க வைத்துள்ளது.
அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் மாணவா்களிடையே மோதலை அகற்றி, ஒற்றுமையை உருவாக்குவதற்கான விழிப்புணா்வு நடவடிக்கைகளில் மாவட்ட நிா்வாகமும், காவல் துறையினரும் தொடா்ந்து ஈடுபட வேண்டும் என்பதே பெற்றோா், ஆசிரியா்கள், தன்னாா்வலா்கள் பலரின் எதிா்பாா்ப்பாக உள்ளது.