அலுவலக நேரத்திற்கு பிறகு 'நோ' இ-மெயில், 'நோ' போன்கால்; மக்களவையில் மசோதா
'நீங்கள்தான் பொறுப்பு' இண்டிகோ நிறுவன தலைமை நிர்வாக அதிகாரிக்கு 'Show-cause Notice'; தவறினால்?
கடந்த சில நாள்களாக, இந்தியாவில் தினமும் ஆயிரக்கணக்கான இண்டிகோ விமானங்களின் பயணங்கள் ரத்தாகி வருகின்றன. இதனால், பல ஆயிரக்கணக்கான மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
என்ன பிரச்னை?
சமீபத்தில் இந்திய அரசு கொண்டு வந்த விமானக் கடமை நேர வரம்புகளுடன் (FDTL) இண்டிகோ நிறுவனத்தால் ஒத்துப்போக முடியாததே இந்த நிலைக்குக் காரணம்.
புதிய விமானக் கடமை நேர வரம்புகள் படி, ஒவ்வொரு விமானிக்கும் குறிப்பிட்ட பயணம் அல்லது நேரத்திற்கு பிறகு கட்டாயமாக ஓய்வு கொடுக்கவேண்டும். இப்படியான பல விதிமுறைகள் விதிக்கப்பட்டிருந்தன.

ஆனால், இந்த விதிமுறைகளைப் பின்பற்றும் அளவிற்கு இண்டிகோ நிறுவனத்திடம் ஊழியர்கள் இல்லை. இந்திய அரசு கொடுத்த நேரத்திற்குள் அதை ஏற்பாடு செய்யவும் இண்டிகோ நிறுவனம் தவறிவிட்டது.
இதனால் தான், தினமும் ஆயிரக்கணக்கான விமானப் பயணங்கள் ரத்தாகி வருகிறது. வரும் 15-ம் தேதி முதல் அனைத்துப் பிரச்னைகளும் சரியாகிவிடும் என்று இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
அறிவிப்பாணை
இந்த நிலையில், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) இண்டிகோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரிக்கு 'விளக்கம் கோரல் அறிவிப்பாணை (Showcause Notice)' அனுப்பியுள்ளது.
அந்த அறிவிப்பாணையில், "தலைமை நிர்வாக அதிகாரியாக, விமானப் பயணங்களில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளுக்கு நீங்கள்தான் பொறுப்பு.
தகுந்த ஏற்படுகளைச் செய்யவேண்டிய பொறுப்பிலிருந்து தவறிவிட்டீர்கள்.
அடுத்த 24 மணி நேரத்திற்குள் இந்த அறிவிப்பாணைக்கு பதிலளிக்கவேண்டும். இல்லையென்றால், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒருவேளை இந்த அறிவிப்பாணைக்கு பதிலளிக்கப்படவில்லை என்றால், சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம் மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.
















