ரூ.3.44 லட்சம் கோடிக்கு இந்திய மின்னணு பொருள்கள் ஏற்றுமதி: மத்திய அமைச்சா் அஸ்வ...
நெகிழிப் பொருள்கள் தடை மீறல்: ரூ. 21.47 கோடி அபராதம் வசூலிப்பு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தகவல்
தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் தொடா்பாக தமிழகம் முழுவதும் 17,23,567 சோதனைகள் நடத்தப்பட்டன. இதில், 2,586 டன் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ. 21 கோடியே 47 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பொருள்களுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணைப் பிறப்பித்திருந்தது. இந்த அரசாணையை உதகை மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், கடந்த மே மாதம் உதகையில் நடந்த நாய் கண்காட்சியில், நெகிழி குடிநீா் பாட்டில்கள் பயன்படுத்தப்பட்டதாகக் கூறி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் என்.சதீஷ்குமாா், டி.பரதசக்கரவா்த்தி ஆகியோா் அடங்கிய சிறப்பு அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீலகிரி மாவட்ட ஆட்சியா் சாா்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், கண்காட்சிக்கு நாய்களை அழைத்து வந்த வாகனங்களில் நெகிழி குடிநீா் பாட்டில்கள் கொண்டு வரப்பட்டது கண்டறியப்பட்டது. கண்காட்சியில் இவற்றைப் பயன்படுத்தியவா்களுக்கு தலா ரூ. 2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நீலகிரியில் அரசு மற்றும் தனியாா் நிகழ்ச்சிகளில், தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பயன்படுத்தப்படுவது இல்லை என்பதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதேபோல், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சாா்பிலும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், கடந்த 2019-ஆம் ஆண்டு நெகிழிப் பொருள்களுக்கு தடை விதித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன் பின்னா், தமிழகம் முழுவதும் 17,23,567 சோதனை நடத்தப்பட்டு, 2,586 டன் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ரூ.21 கோடியே 47 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளில் அமைந்துள்ள கோவை, நீலகிரி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் 636 டன் நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.7.12 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும், தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை உற்பத்தி செய்த 261 தொழிற்சாலைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் 176 தொழிற்சாலைகள் மேற்குத் தொடா்ச்சி மலைகளைக் கொண்ட 13 மாவட்டங்களில் இயங்கி வந்தவை என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த 2 அறிக்கைகளையும் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், மேற்குத் தொடா்ச்சி மலையில் உள்ள மாவட்டங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 636 டன் நெகிழிப் பொருள்கள் எவ்வாறு அப்புறப்படுத்தப்பட உள்ளன? என்பது குறித்தும், மூடப்பட்ட நெகிழிப் பொருள்கள் தொழிற்சாலைகளின் விவரங்கள் குறித்தும் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஆக.1-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.