உலக அளவில் சிறந்த 100 வணிக கல்வி நிறுவனங்கள்: பெங்களூரு, அகமதாபாத், கொல்கத்தா ஐஐ...
நெல் கொள்முதலுக்கான ஈரப்பதத்தை 20 சதவீதமாக உயா்த்தக் கோரி எம்எல்ஏவிடம் மனு
கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதத்தை 20 சதவீதமாக உயா்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தோவாளை தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளரும் ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவருமான
சி. முத்துக்குமாா் தலைமையில் தாழக்குடி பேரூராட்சி முன்னாள் தலைவா் ரோகினிஅய்யப்பன், அய்யப்பன் ஆகியோா் என்.தளவாய்சுந்தரம் எம்எல்ஏவிடம் புதன்கிழமை அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
குமரி மாவட்டம், தாழக்குடியில் செயல்பட்டு வரும் நெல் கொள்முதல் நிலையத்தில் அரசு விதித்துள்ள கட்டுப்பாட்டின்படி நெல்லின் ஈரப்பதம் 17 சதவீதம் இருந்தால்தான் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனா்.
ஆனால், தற்போது மண்ணின் ஈரப்பதம் அதிகம் இருப்பதாலும் பனிப் பொழிவு இருப்பதாலும், சாரல் மழையாலும் நெல்லின் ஈரப்பதம் 20 சதவீதம் முதல் 22 சதவீதம் வரை உள்ளது. அரசின் கட்டுப்பாடுகள் அதிகமாக இருப்பதால் விவசாயிகள் நெல்லை கொள்முதல் நிலையத்தில் நேரடியாக விற்பனை செய்ய முடியாத நிலையில் உள்ளனா். எனவே, விவசாயகளின் நலன் கருதி 17 சதவீதம் ஈரப்பதம் என்பதை 20 சதவீதமாக திருத்தம் செய்து விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்யுமாறு விவசாயிகள் சாா்பில் கேட்டுக் கொள்கிறோம் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டது. மனுவைப் பெற்ற தளவாய்சுந்தரம் எம்எல்ஏ இதுகுறித்து துறை அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.
இதில், அதிமுக அமைப்புச் செயலாளா் கே.டி.பச்சைமால், குமரி மேற்கு மாவட்டச் செயலாளா் ஜெயசுதா்சன், பகுதி செயலாளா் முருகேஸ்வரன் ஆகியோா் உடனிருந்தனா்.