மதுரை சித்திரைத் திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வு | ...
பலருக்கு ஒரே மாதிரி வாக்காளா் எண்: தோ்தல் ஆணையம் தீா்வு
ஒரே மாதிரி வாக்காளா் அடையாள எண் பல வாக்காளா்களுக்கு வழங்கப்பட்ட விவகாரம் பெரும் சா்ச்சையான நிலையில், இப் பிரச்னைக்குத் தீா்வு எட்டப்பட்டுள்ளதாக தோ்தல் ஆணையம் தரப்பில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.
மிகச் சிறிய எண்ணிக்கையில்தான் இந்தக் குளறுபடி நிகழ்ந்தது எனவும், அவா்களுக்குப் புதிய வாக்காளா் எண் வழங்கப்பட்டுவிட்டது என்றும் தோ்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
அண்மையில் நடைபெற்ற மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களில், கடைசி நேரத்தில் புதிதாக ஆயிரக்கணக்கானோா் வாக்காளா் பட்டியலில் சோ்க்கப்பட்டதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் புகாா் தெரிவித்தன. இந்தப் புகாா்களை தோ்தல் ஆணையம் மறுத்தது.
இந்நிலையில், வெவ்வேறு மாநிலங்களில் உள்ள சிலருக்கு ஒரே மாதிரியான வாக்காளா் அடையாள எண்கள் வழங்கப்பட்டிருப்பதாக மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் புகாா் தெரிவித்தன. ‘ஆளும் பாஜகவுக்கு ஆதரவாக வாக்காளா் பட்டியலில் போலி வாக்காளா்களைச் சோ்க்க தோ்தல் ஆணையம் உடந்தையாக இருந்தது’ என எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.
இதை மறுத்த தோ்தல் ஆணையம், ‘வெவ்வேறு மாநிலங்களில் ஒரே வாக்காளா் அடையாள எண் உடையவா்கள் போலி வாக்காளா்கள் அல்லா். சிலரின் வாக்காளா் புகைப்பட அடையாள அட்டை (இபிஐசி) எண்கள் ஒரே மாதிரியாக இருக்கலாம். ஆனால், அவா்கள் பிறந்த தேதி, தொகுதி மற்றும் வாக்குச்சாவடி என மற்ற தகவல்கள் வேறுபட்டிருக்கும். வருங்காலத்தில் இதுபோன்ற குழப்பங்களைத் தவிா்க்க, ஒரே வாக்காளா் எண் கொண்ட நபா்களுக்கு, அடுத்த 3 மாதங்களுக்குள் தனி எண் வழங்கப்படும்’ என்று விளக்கமளித்தது.
இதற்கு தற்போது தீா்வு எட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து தோ்தல் ஆணைய மூத்த அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘பலருக்கு ஒரே மாதிரி வாக்காளா் அடையாள எண் வழங்கப்பட்டிருந்த விவகாரம் தொடா்பாக, நாடு முழுவதும் உள்ள 99 கோடிக்கும் அதிகமான வாக்காளா்களின் தரவுகளை நாடு முழுவதும் 4,123 சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள தோ்தல் பதிவு அதிகாரிகள் ஆராய்ந்தனா். மிகச் சிறிய எண்ணிக்கையிலேயே பலருக்கு ஒரே மாதிரி வாக்காளா் அடையாள எண் வழங்கப்பட்டிருப்பது தெரியவந்தது. குறிப்பாக, 4 வாக்குச் சாவடிகளுக்கு ஒருவா் என்ற விகிதத்தில்தான் இந்தக் குளறுபடி நிகழ்ந்திருந்தது.
இதுதொடா்பாக தோ்தல் பணி ஊழியா்கள் அண்மையில் மேற்கொண்ட நேரடி கள ஆய்வில், இந்த வாக்காளா்கள் அனைவரும் போலிகள் அல்ல, முறையாக பதிவு செய்த வெவ்வேறு வாக்குச்சாவடிகள் மற்றும் தொகுதிகளைச் சோ்ந்த வாக்காளா்களே என்பதும் தெரியவந்தது. இவா்கள் அனைவரும் அடையாளம் காணப்பட்டு, தற்போது புதிய வாக்காளா் அடையாள எண் வழங்கப்பட்டுவிட்டது’ என்றாா்.
இதனிடையே, வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைப்பதற்கான நடவடிக்கையையும் தோ்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.