"பாஜக-வின் வெற்றிக்கு காங்கிரஸ்தான் காரணம்; முதுகில் குத்துவிட்டார்கள்!" - சாடும...
பாகிஸ்தான்: பலுசிஸ்தானில் ராணுவ ரயில்மீது தற்கொலைப் படை தாக்குதல்: 24 பேர் உடல் சிதறி பலி!
பாகிஸ்தானின் பதற்றம் நிறைந்த பலுசிஸ்தான் மாகாணத்தில், ராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற ரயில் மீது நடத்தப்பட்ட சக்திவாய்ந்த தற்கொலைப்படைத் தாக்குதலில் குறைந்தது 24 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
குவெட்டாவில் உள்ள சமன் பட்டாக் என்ற இடத்தில் ரயில் சிக்னலைக் கடந்து கொண்டிருந்தபோது, வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட கார் ஒன்று ரயிலின் பெட்டிகளில் மோதி வெடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கோரத் தாக்குதலின் தாக்கத்தால் ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டு தீப்பிடித்து எரிந்தன.

பெஷாவர் நகருக்குச் சென்று கொண்டிருந்த ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பலரும் இந்தத் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். அவர்கள் செவ்வாய்க்கிழமை தொடங்கவிருக்கும் ஈத் பண்டிகையைக் கொண்டாடுவதற்காகப் பயணம் மேற்கொண்டிருந்ததாக AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தாக்குதல் நடந்த இடத்திலிருந்து கரும் புகை மூட்டம் எழுந்ததை காண முடிந்தது. விபத்துக்குள்ளான ரயில் பெட்டி ஒருபுறம் கவிழ்ந்து கிடந்த நிலையில், இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்க மக்கள் அதன் மீது ஏறிச் சென்ற காட்சிகள் வெளியாகியுள்ளன. ரத்தக் கறையுடன் கிடந்தவர்களை மக்கள் ஸ்ட்ரெச்சர்களில் தூக்கிச் சென்றனர், அதே நேரத்தில் ஆயுதம் ஏந்திய பாதுகாப்புப் படையினர் அப்பகுதியைப் பாதுகாத்தனர்.
இந்த குண்டுவெடிப்பின் தீவிரம்
சுமார் 25 முதல் 30 மீட்டர் தொலைவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல கார்கள் முற்றிலுமாக எரிந்து சாம்பலாயின. அதன் அருகில் இருந்த ஒரு கட்டடமும் கடுமையாக பாதிக்கப்பட்டது; அதன் ஜன்னல்கள் உடைந்து சிதறி, சுவர்கள் இடிந்து விழுந்தன.
இந்தத் தாக்குதலுக்கு பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் (BLA) பொறுப்பேற்றுள்ளது. இது ஒரு தற்கொலைத் தாக்குதல் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. "எங்கள் தற்கொலைப்படையான மஜீத் பிரிகேட், குவெட்டா கண்டோன்மென்ட்டில் இருந்து ஆக்கிரமிப்புப் படையினரை ஏற்றிச் சென்ற ரயில் மீது இன்று காலை வெற்றிகரமாகத் தாக்குதல் நடத்தியது.

இந்த நடவடிக்கைக்கு பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் முழுப் பொறுப்பேற்கிறது," என்று BLA வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தாக்குதல் குறித்த விரிவான தகவல்கள் விரைவில் ஊடகங்களுக்கு வெளியிடப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாகப் பாதுகாப்புப் படையினர் அதிக அளவில் நிறுத்தப்பட்டிருக்கும் பகுதியிலேயே இந்தத் தாக்குதல் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள பலுசிஸ்தான் மாகாணம், பல தசாப்தங்களாகப் பிரிவினைவாதப் போராட்டங்களைச் சந்தித்து வருகிறது. இனவாத பலூச் பிரிவினைவாதிகள், அதிக சுயாட்சி மற்றும் இயற்கை வளங்களில் அதிக பங்கைக் கோரிப் போராடி வருகின்றனர். பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் போன்ற குழுக்கள், பாதுகாப்புப் படையினர், பொதுமக்கள் மற்றும் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத் திட்டங்கள் (CPEC) மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
















