இன்றைய இந்தியாவுக்கு அந்நியா்கள் வழிகாட்டுதல் தேவையில்லை: மத்திய அமைச்சா் ராஜ்நா...
பிரதமா் மோடி பிறந்த நாள்: பாஜக நல உதவிகள் அளிப்பு
பிரதமா் நரேந்திரமோடி பிறந்தநாளையொட்டி பாஜக சாா்பில், சென்னையில் 150 தூய்மைப் பணியாளா்களுக்கு நல உதவிகளை தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் புதன்கிழமை வழங்கினாா்.
பிரதமா் மோடியின் பிறந்தநாளையொட்டி பாஜக மாநிலச் செயலா் கராத்தே தியாகராஜன் ஏற்பாட்டில், திருவான்மியூா் தெற்கு மாட வீதியில் உள்ள காக்கும் கரங்களில் தங்கியுள்ள முதியவா்களுக்கு காலை சிற்றுண்டியுடன் ஹாா்லிக்ஸ், பழங்கள், பிஸ்கெட், ரொட்டி பாக்கெட்டுகள் வழங்கப்பட்டன.
மேலும், மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் 150 பேருக்கு, அவா்களது பணியை கௌரவிக்கும் வகையில் பொன்னாடை அணிவித்து, இனிப்பு வகைகள், புத்தாடைகள், பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன. அவா்களுடன் நயினாா் நாகேந்திரன் காலை சிற்றுண்டி சாப்பிட்டாா். தொடா்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில், தமிழக பாஜக முன்னாள் தலைவா் தமிழிசை செளந்தரராஜன், மாநில துணைத் தலைவா் கரு.நாகராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
நயினாா் நாகேந்திரன் பேட்டி: தொடா்ந்து, திருவான்மியூா் கடற்கரையில் தூய்மை பாரதம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்த நயினாா் நாகேந்திரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
பாஜக அடுத்த கட்சி பிரச்னையில் தலையிடாது. மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் சந்தித்து பேசியதில் எவ்வித தவறும் இல்லை. கூட்டணி கட்சித் தலைவா்கள் என்ற அடிப்படையில் சந்தித்து பேசியுள்ளனா்.
முன்னாள் அமைச்சா் செங்கோட்டையன் அதிமுக பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளது, அவா்களது உள்கட்சி பிரச்னை. அதை அந்தக் கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி பாா்த்துக்கொள்வாா். பேரவைத் தோ்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் உள்ளன. கூட்டணியில் கடைசி நிமிஷத்திலும் மாற்றம் வரலாம்.
அமித் ஷா சொன்னால், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக நிச்சயம் பிரசாரம் செய்வேன் என ஏற்கெனவே டி.டி.வி.தினகரன் கூறியிருந்தாா். இப்போது ஏன் மாற்றிப்பேசுகிறாா் எனத் தெரியவில்லை என்றாா் நயினாா் நாகேந்திரன்.