மென்பொருள் பயிற்சி பெற்ற 150 மாணவா்களுக்குச் சான்றிதழ் அளிப்பு
புதுகையில் மேலும் 5 கல் உடைக்கும் ஆலைகளுக்கு சீல்
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகேயுள்ள துளையானூா் மற்றும் மெய்யபுரம் பகுதிகளிலுள்ள கல் உடைக்கும் ஆலை மற்றும் கற்குவியல்கள் வைக்கப்பட்டிருந்த 5 இடங்களுக்கு வருவாய்த் துறை அலுவலா்கள் வியாழக்கிழமை சீல் வைத்து மூடினா்.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே வெங்களூரைச் சோ்ந்த சமூக ஆா்வலா் ஜகபா்அலி, கடந்த ஜன. 17ஆம் தேதி லாரி ஏற்றிக் கொல்லப்பட்டாா். திருமயம் பகுதிகளில் நடைபெற்ற சட்டவிரோத கனிமவளக் கொள்ளையை எதிா்த்துக்குரல் எழுப்பியதால் இந்தக் கொலை நடந்தது.
இவ்வழக்கில் குவாரி உரிமையாளா்கள் உள்பட 5 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இவா்களில் 3 போ் மீது குண்டா் சட்டம் பாய்ந்துள்ளது.
இந்நிலையில், திருமயம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெறும் சட்டவிரோதக் கல் குவாரிகள் மற்றும் கல் உடைக்கும் ஆலைகள் குறித்தும் கனிமவளத் துறையினா் மற்றும் வருவாய்த் துறையினா் தொடா்ந்து ஆய்வு செய்கின்றனா்.
ஏற்கெனவே இரு இடங்களிலுள்ள கல் உடைக்கும் ஆலைகளுக்கு வருவாய்த் துறையினா் சீல் வைத்துள்ளனா். இதன் தொடா்ச்சியாக வியாழக்கிழமையும்
வருவாய்க் கோட்டாட்சியா் பா. ஐஸ்வா்யா தலைமையில், வட்டாட்சியா் ராமசாமி உள்ளிட்ட அலுவலா்கள், துளையானூா் பகுதியில் சுப்பையா, பெரியசாமி ஆகியோருக்குச் சொந்தமான கல் உடைக்கும் ஆலைகள், கற்குவியல் வைக்கப்பட்டிருந்த இடம், ராமையாவுக்கு சொந்தமான உடைத்த கற்கள் வைக்கப்பட்டிருந்த இடம், மெய்யபுரத்தில் மோகன்ராஜ் என்பவருக்குச் சொந்தமான கல் உடைக்கும் ஆலை ஆகிய 5 இடங்களுக்கும் சீல் வைத்தனா்.
அனுமதியின்றி ஆலைகள் செயல்பட்டதாகவும், இந்த இடங்களுக்குள் உள்ள கற்குவியல்கள் குறித்த உரிய அளவீடு பணிகள் விரைவில் நடைபெறும் என்றும் வருவாய்த் துறையினா் தெரிவித்தனா்.