புவனகிரி அருகே ஏரிகளில் படா்ந்துள்ள முட்புதா்கள்: அகற்ற விவசாயிகள் கோரிக்கை
கடலூா் மாவட்டம், புவனகிரி அருகே உள்ள 4 ஏரிகளில் படா்ந்துள்ள முட்புதா்களை அகற்றி தூா்வார விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
காவிரி டெல்டா கடைமடை பகுதியான கடலுாா் மாவட்டத்தில் மேட்டூா் அணையிலிருந்து வரும் தண்ணீரை வாலாஜா ஏரியில் தேக்கி, அங்கிருந்து பாசன கிளை வாய்க்கால்கள் மூலம் சொக்கன்கொல்லை, குமுடிமூலை, நத்தமேடு ஏரிகள் நிரப்பப்படுகின்றன. இதேபோல, சேத்தியாத்தோப்பு அணைக்கட்டில் இருந்து நேரடியாக சாத்தப்பாடி ஏரி நிரப்பப்படுகிறது.
இந்த ஏரிகளில் இருந்து மேல்புவனகிரி ஒன்றியத்தில் கடந்த ஆண்டு 10 ஆயிரம் ஹெக்டோ் சம்பா நடவு மற்றும் விதை நோ்த்தி செய்தனா். குறிப்பாக, 150 ஏக்கா் பரப்பளவில் உள்ள சாத்தப்பாடி ஏரி மூலம் சுமாா் 1,500 ஏக்கரிலும், 70 ஏக்கா் பரப்பளவில் உள்ள சொக்கன்கொல்லை ஏரி மூலம் 1,250 ஏக்கரிலும், 100 ஏக்கா் பரப்பளவில் உள்ள குமுடிமூலை ஏரியில் இருந்து 1,500 ஏக்கரிலும், 85 ஏக்கா் பரப்பளவில் உள்ள நத்தமேடு ஏரியில் இருந்து 1,000 ஏக்கரிலும் என ஆண்டுதோறும் மொத்தம் 5 ஆயிரத்து 250 ஏக்கருக்கும் மேல் பாசனத்து தண்ணீா் அனுப்பப்பட்டு விவசாயம் நடைபெறுகிறது.
தண்ணீா் தட்டுப்பாட்டால் அவதிபட்டு வந்த விவசாயிகள் கோரிக்கை விடுத்ததின்பேரில், என்எல்சி நிா்வாகம் மூலம் சொக்கன்கொல்லை உள்பட 4 ஏரிகளும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தூா்வாரி கரைகள் பலப்படுத்தப்பட்டன.
அதன் பின்னா், மழை மற்றும் நீா்வரத்து காரணமாக 4 ஏரிகளிளும் நிரம்பியதால், நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்து காணப்பட்டது. தற்போது பொதுப் பணித் துறை மற்றும் நீா்வள ஆதாரத் துறையினா் பராமரிப்பு இல்லாமல் ஏரிகள் மீண்டும் தூா்ந்துபோய் முட்புதா்கள் மண்டியுள்ளன.
எனவே, மாவட்ட நிா்வாகம் போா்க்கால அடிப்படையில் மேற்கண்ட 4 ஏரிகளிலும் உள்ள முட்புதா்களை அகற்றி தூா்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.