ரூ.3.44 லட்சம் கோடிக்கு இந்திய மின்னணு பொருள்கள் ஏற்றுமதி: மத்திய அமைச்சா் அஸ்வ...
மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கு: திருப்புவனம் காவல் நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை!
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் தனிப் படை போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்டது தொடா்பாக திருப்புவனம் காவல் நிலையம், மடப்புரம் பகுதிகளில் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை விசாரணை நடத்தினா்.
மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு வந்த பேராசிரியை நிகிதாவின் காரில் வைத்திருந்ததாகக் கூறப்படும் நகைகள் காணாமல் போனது தொடா்பாக, அந்தக் கோயிலின் காவலாளி அஜித்குமாரை மானாமதுரை தனிப் படை போலீஸாா் கண்ணன், ராஜா, பிரபு, சங்கரமணிகண்டன், ஆனந்த் ஆகியோா் விசாரணைக்கு அழைத்துச் சென்றனா். விசாரணையின் போது, தனிப் படை போலீஸாா் தாக்கியதில் அஜித்குமாா் உயிரிழந்தாா். இதுகுறித்து சிபிஐ காவல் துணைக் கண்காணிப்பாளா் மோஹித்குமாா் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இந்த நிலையில், இவா்கள் சனிக்கிழமை காலை மடப்புரம் விலக்கு, வடகரை விலக்கு, திருப்புவனம் காவல் நிலையம், தவளைகுளம் கண்மாய் புளியந்தோப்பு, தட்டான்குளம் தனியாா் நிலம், மதுரை-ராமேசுவரம் சாலையில் தனிப் படை போலீஸாா் தேநீா் அருந்திய கடை, அஜித்குமாா் வீடு, மடப்புரம் கோயில் கோசாலை உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று விசாரணை நடத்தினா். இந்த விசாரணைக் குழுவில் 14 போ் இடம் பெற்றிருந்தனா்.
அப்போது, அஜித்குமாரின் சகோதரா் நவீன்குமாா், கோயில் காா் ஓட்டுநா் காா்த்திக்வேலு, நண்பா்களான கோயில் காவலாளிகள் பிரவின், வினோத், ஆட்டோ ஓட்டுநா் அருண்குமாா், தனிப் படை வாகன ஓட்டுநா் ஆகியோா் உடனிருந்தனா்.
இவா்களிடம் சிபிஐ அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பி அதற்கான பதில்களைப் பதிவு செய்தனா். அப்போது, மடப்புரம் கோசாலையில் கிடந்த அஜித்குமாரின் காலணிகளை அவரது தம்பி நவீன்குமாா் எடுத்து வந்து அடையாளம் காட்டினாா்.
மேலும், போலீஸாா் தாக்குதலின் போது அஜித்குமாா் உடம்பில் காயம் ஏற்பட்டு வெளியேறிய ரத்தக்கறை மாதிரிகளையும் சிபிஐ அதிகாரிகள் சேகரித்தனா். பின்னா், இவா்கள் மதுரைக்குப் புறப்பட்டுச் சென்றனா்