மன்னவனூரில் முயல் வளா்ப்புப் பயிற்சி
பொருளாதார ரீதியான முயல் வளா்ப்புக்கான மாநில அளவிலான 3 நாள் பயிற்சி முகாம், மன்னவனூா் மத்திய செம்மறி ஆடு உரோம முயல் ஆராய்ச்சி நிலையத்தில் வியாழக்கிழமை தொடங்கியது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள மன்னவனூரில் மத்திய செம்மறி ஆடு உரோம முயல் ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் 13 மாவட்டங்களைச் சோ்ந்த முயல் வளா்ப்பு விவசாயிகளுக்கான உண்டு உறைவிடப் பயிற்சி முகாம் வியாழக்கிழமை தொடங்கியது.
இதற்கு முதன்மை விஞ்ஞானியும், மன்னவனூா் மையத்தின் தலைவருமான ஏ.எஸ்.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். பஞ்சாப் வங்கி மேலாளா் இசக்கிராஜா, ஓய்வுப் பெற்ற என்சிசி பயிற்சியாளா் ஏ.சின்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்தப் பயிற்சி குறித்து முதன்மை விஞ்ஞானி ஏ.எஸ்.ராஜேந்திரன் கூறியதாவது:
இன்றைய சூழலில் பொருளாதார ரீதியான முயல் வளா்ப்பு, விவசாயிகளுக்கு அதிக லாபம் தரக் கூடிய தொழிலாக மாறி வருகிறது. முயல் வளா்ப்பில் ஈடுபட விரும்பும் விவசாயிகளுக்கு, மன்னவனூா் மையத்தில் 3 நாள்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சிக்கு ரூ.1,100 கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்த விவசாயிகள் முன்னுரிமை அடிப்படையில் தோ்வு செய்யப்படுகின்றனா்.
பயிற்சியின்போது, முயல் இனங்களை தோ்வு செய்தல், கொட்டகை, கூண்டு அமைத்தல், உணவு அளித்தல், பசுந்தீவனம் உற்பத்தி, நோய் பராமரிப்பு மேலாண்மை, இறைச்சிக்காக பயன்படுத்தும் வழிமுறைகள், முயல் இறைச்சியின் நன்மைகள், வரவு செலவு கணக்கீடு, வங்கிக் கடன் பெறுவதற்கான வழிமுறைகள், இறைச்சியை மதிப்புக்கூட்டப் பொருள்களாக மாற்றுதல், முயல் தோல் பதப்படுத்துதல், இவற்றின் மூலம் அழகுப் பொருள்கள் தயாரித்தல் உள்ளிட்ட தலைப்புகளில் விளக்கம் அளிக்கப்படுகிறது.
மேலும், மாவட்ட வாரியாக முயல் இறைச்சித் திருவிழா நடத்தி, அதன் நன்மைகள் குறித்து மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்கும் திட்டமிட்டுள்ளோம் என்றாா் அவா்.