வன்னியரசை கவனித்த ஆனந்த்; அமைச்சர்களுக்கு நடுவே ஒரு பவர் சென்டர்! - சிங்கப்பெண் ...
மம்தாவுக்குப் பின்னடைவு - சோதனை, சர்ச்சை, சம்மன்: மேற்கு வங்கத்தின் `அதகள' அரசியல் | Timeline
மூன்றுமுறை முதல்வர் பதவியில் இருந்த மம்தா பானர்ஜி, 2026 சட்டமன்றாத் தேர்தலுக்குப் பிறகு பெரும் துயரத்துக்கு ஆட்பட்டிருக்கிறார். ஆட்சி, அதிகாரம், கட்சி, தொண்டர்கள் என பரபரப்பாக இயங்கி, பவர் சென்டராக இருந்தவர் இப்போது ஓரம்கட்டப்பட்டு, கட்டம் கட்டப்பட்டு வருகிறார். கடந்த சில வாரங்களாக மம்தா பானர்ஜியை மையப்படுத்தி நடந்த நிகழ்வுகளின் தொகுப்பு இதோ!
மே 4 தேர்தல் முடிவுகள்: மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க-விடம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்தது. 'இது மோசடியான வெற்றி' எனக் குற்றம்சாட்டிய மம்தா பானர்ஜி, 'பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன்' என அறிவித்தார். அதைத் தொடர்ந்து கட்சியில் கலகம் வெடித்தது.
மே 6: சட்டமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக, 70 சட்டமன்ற உறுப்பினர்களின் போலி கையொப்பங்களுடன் திரிணாமுல் கட்சியின் கூட்டம் நடைபெற்றதாக ஓர் ஆவணம் தயாரிக்கப்பட்டது.

மே 20: போலி கையொப்பங்கள் அடங்கிய அந்த ஆவணம் சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
மே 21: மே 6 அன்று கூட்டம் நடக்கவில்லை என அந்தக் கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் ரீதாபிரதா மற்றும் சந்திபன் சாஹா வெளிப்படையாகப் பேசத் தொடங்கினர். அதன் விளைவாக அவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். இந்த விவகாரம் குறித்து விசாரிக்க மாநில அரசு சிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது.
மே 30: தேர்தலுக்கு பிந்தைய வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கச் சென்ற அபிஷேக் பானர்ஜி மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
மே 31: சட்டமன்ற உறுப்பினர்களின் அதிருப்தியை உணர்ந்த மம்தா பானர்ஜி தன் இல்லத்தில் கூட்டிய அவசரக் கூட்டத்திற்கு 20 சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே வந்ததால், கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
ஜூன் 2: அபிஷேக் பனர்ஜி உள்ளிட்ட தொண்டர்கள் மீதான வன்முறையைக் கண்டித்து, மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் போராட்டம் நடத்தினார். இந்தப் போராட்டத்தில் 10-க்கும் குறைவான எம்.எல்.ஏ-க்களே பங்கேற்றனர். அதனால் அவர் அரசியலில் தனிமைப்படுத்தப்பட்டது வெளிச்சமானது.
ஜூன் 3: திரிணாமுல் காங்கிரஸின் 80 எம்.எல்.ஏ-க்களில் 58 அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் கிளர்ச்சி செய்து, சபாநாயகரிடம் கடிதம் அளித்து ரீதாபிரதாவை எதிர்க்கட்சித் தலைவராக அறிவித்து "பிரதான எதிர்க்கட்சி" அந்தஸ்தைக் கோரினர். இதன் மூலம் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானர்ஜி ஓரங்கட்டப்பட்டார்.
ஜூன் 3 (கட்சி நடவடிக்கை): சட்டமன்றக் கட்சி பிளவுபட்ட அதே நாளில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மேற்கு வங்கத்தில் உள்ள தனது அனைத்துக் குழுக்களையும் உடனடியாகக் கலைத்தது; மம்தாவின் விசுவாசி ஃபிர்ஹாத் ஹக்கீம் கொல்கத்தா மேயர் பதவியிலிருந்து விலகினார்.
ஜூன் 4: மம்தாவின் மற்றொரு விசுவாசியான கிருஷ்ணா சக்ரவர்த்தி பிதான்நகர் மேயர் பதவியிலிருந்து விலகினார்.
ஜூன் 8: இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி கலந்துகொண்டு, இந்தியா கூட்டணியை பலப்படுத்த வேண்டும் என உரையாற்றினார்.
ஜூன் 9: போலி கையொப்பம் விவகாரம் தொடர்பாக மம்தா பானர்ஜி இல்லத்தில் சிஐடி காவல்துறை சோதனை நடத்தி வருகிறது.












