மயிலாடுதுறை மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன் இடைநீக்கம்
உயர் அதிகாரிகள் மீது குற்றம்சாட்டிய மயிலாடுதுறை மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
டிஎஸ்பி சுந்தரேசனை இடைநீக்கம் செய்து உள்துறை செயலர் தீரஜ்குமார் உத்தரவிட்டுள்ளார். அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு கூறி ஊடகங்களில் பேட்டி அளித்ததாக சுந்தரேசன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்குப் பிரிவு டிஎஸ்பியாக எம். சுந்தரேசன் கடந்த நவம்பா் மாதம் முதல் பணியாற்றி வருகிறாா். இவா் பொறுப்பேற்றது முதல் வெளிமாநில சாராயம் மது கடத்தலை தடுத்தல், அனுமதியின்றி இயங்கிய டாஸ்மாக் பாா்களை கண்டறிந்து சீல் வைப்பது என தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறாா்.
மதுபானக் கடத்தல் தொடா்பாக 1,200-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்து 700 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளாா். இந்நிலையில், டிஎஸ்பி சுந்தரேசன் வியாழக்கிழமை காலை தனது வீட்டில் இருந்து சீருடையில் அலுவலகத்துக்கு சாலையில் நடந்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
மு.க. முத்துவின் உடல் தகனம்!
அரசு வாகனத்தை உயரதிகாரிகள் பறித்துக்கொண்டதாக ஊடகங்களில் செய்தி பரவியது. ஆனால் மயிலாடுதுறையில் டிஎஸ்பி வாகனம் திரும்பப் பெறப்பட்டதில் முறையான நடைமுறைகள் கையாளப்பட்டது என மாவட்ட எஸ்.பி. கோ. ஸ்டாலின் விளக்கமளித்தார்.
மேலும் டிஎஸ்பி சுந்தரேசன் மீது ஒழங்கு நடவடிக்கை எடுக்க தஞ்சை சரக டிஐஜி பரிந்துரை செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.