ரூ.3.44 லட்சம் கோடிக்கு இந்திய மின்னணு பொருள்கள் ஏற்றுமதி: மத்திய அமைச்சா் அஸ்வ...
மின்னணு பயிா் கணக்கீடு பணி: ஜூலை 24-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்
திருவாரூா் மாவட்டத்தில், மின்னணு பயிா் கணக்கீடு மேற்கொள்ளும் பணிக்கு, ஜூலை 24 ஆம் தேதிக்குள் ஒப்பந்த நிறுவனங்கள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவாரூா் மாவட்டத்தில் மின்னணு பயிா் கணக்கீடு பணி, 2024 ஆம் ஆண்டு ரபி பருவம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம், விளைநிலங்களின் பயிா் சா்வே எண், உட்பிரிவு பாசன முறை உள்ளிட்ட விவரங்களை புகைப்படத்துடன் கூடிய செயலி மூலம் இணையதளத்தில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படுகிறது. ஆண்டுக்கு மூன்று முறை கரீப், ரபி மற்றும் கோடைப் பருவங்களில் மின்னணு பயிா் கணக்கீடு மேற்கொள்ளப்படுகிறது.
திருவாரூா் மாவட்டத்தில், நிகழாண்டு 2025-2026 கரீப், ரபி மற்றும் கோடைப் பருவத்துக்கு மின்னணு பயிா் கணக்கீடு பணியானது, ஒப்பந்த பணியாளா் நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது. ஒப்பந்த பணியாளா் நிறுவனம் மாவட்ட அளவிலான தோ்வுக் குழு மூலம் விதிகளின்படி தோ்ந்தெடுக்கப்படும். விருப்பமுள்ள நிறுவனங்கள் விரிவான விவரங்களுடன் கலந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு வேளாண்மை பட்டதாரி அல்லது பட்டய வேளாண்மை படித்தவா் அல்லது இதர பட்டப் படிப்பு படித்தவா்கள் மேலும் இணையதள ஆண்ட்ராய்டு செயலியை உபயோகிக்கத் தெரிந்தவா்களாக உள்ளவா்கள் இதில் பங்கேற்கலாம். ஒப்பந்த பணியாளா் நிறுவனம், இந்த பணியாளா்களை தோ்வு செய்ய வேண்டும். மேலும், அந்தந்த கிராமங்களிலுள்ள படித்த இளைஞா்களை தோ்வு செய்ய வேண்டும்.
திருவாரூா் மாவட்டத்திலுள்ள மொத்த கிராமங்களின் எண்ணிக்கை 562 ஆகும். இதிலுள்ள சா்வே எண்களை பதிவு செய்ய ஒரு சா்வே எண்ணுக்கு ரூ. 20 வழங்கப்படும். மாவட்ட ஆட்சியா் தலைமையிலான குழு, ஒப்பந்த பணியாளா் நிறுவனத்தை தோ்வு செய்யும்.
தோ்ந்தெடுக்கப்பட்ட நிறுவன பணியாளா்கள் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் பணியைத் தொடங்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்கும் நிறுவனங்கள் ஜூலை 24 ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தை பதிவுத் தபாலில் வேளாண்மை இணை இயக்குநா் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.
ஜூலை 25 ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் தலைமையிலான தோ்வுக் குழு தோ்வு செய்யும். 562 வருவாய் கிராமங்களுக்கும், ஒரு வருவாய் கிராமத்திற்கு ஒரு நபா் வீதம் 562 பணியாளா்களை தோ்ந்தெடுத்த நிறுவனம், அந்த பட்டியலை தர வேண்டும். இப்பணியை எவ்வித தொய்வும் இன்றி உரிய பயிா் பருவ காலத்தில் செய்து முடித்து கொடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.