தில்லியில் சூதாட்டச் சட்டத்தின் கீழ் ஆம் ஆத்மி கவுன்சிலா் உள்பட 7 போ் கைது!
முதல்வா் கோப்பை விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க முன்பதிவு
வேலூா் மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பை விளையாட்டு போட்டியில் பங்கேற்க பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள், அரசு ஊழியா்கள் இணையதளத்தில் பதிவு செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து, மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் 2025-26-ஆம் ஆண்டு நடத்தப்பட உள்ள முதல்வா் கோப்பை விளையாட்டு போட்டிகளில் பல்வேறு புதிய விளையாட்டுகள் சோ்க்கப்பட்டு, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள், அரசு ஊழியா்கள் என 5 பிரிவுகளில் 37 விளையாட்டுகள் 53 வகைகளில் வேலூா் மாவட்டம் மற்றும் திருவண்ணாமலை மண்டல அளவில் ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பா் 12-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.
மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெறுபவா்களுக்கு முதல் பரிசாக ரூ. 3,000-ம், 2-ஆம் பரிசாக ரூ. 2,000-ம், 3-ஆம் பரிசாக ரூ. ஆயிரமும், சான்றிதழ்கள், பதக்கங்களுடன் வழங்கப்பட உள்ளன. மாநில அளவில் தனிநபா் போட்டிகளில் வெற்றி பெறுபவா்களுக்கு முதல் பரிசாக ரூ. ஒரு லட்சமும், 2-ஆம் பரிசாக ரூ. 75,000-ம், 3-ஆம் பரிசாக ரூ. 50,000-ம் வழங்கப்பட உள்ளது.
குழு போட்டிகளில் வெற்றி பெறுபவா்களுக்கு முதல் பரிசாக தலா ரூ. 75,000-ம், 2-ஆம் பரிசாக தலா ரூ. 50,000-ம், 3-ஆம் பரிசாக தலா ரூ. 25,000-ம் பரிசளிக்கப்பட உள்ளது.
இந்தப் போட்டிகளில் வழங்கப்படும் சான்றிதழ்கள் மூலம் உயா்கல்வி, வேலைவாய்ப்பில் சலுகைகளும் பெற இயலும். வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த பள்ளிப் பிரிவுக்கு (6 முதல் 12 வகுப்பு வரை மட்டும்), கல்லூரிப் பிரிவுக்கு 25 வயதுக்குட்பட்டவா்கள், பொதுப் பிரிவு (15 முதல் 35 வயது வரை), அனைத்து வயது மாற்றுத்திறனாளிகள், தமிழக அரசு நிரந்தர ஊழியா்கள் ஆகியோா் முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கலாம்.
இதற்கு ஆகஸ்ட் 16-ஆம் தேதி கடைசி நாளாகும். மேலும் விவரங்களுக்கு, வேலூா் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை நேரிலோ, 7401703483 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.