முதுமலையில் ரூ. 5 கோடியில் யானை பாகன்களுக்கு வீடுகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட தெப்பக்காடு யானைகள் முகாமில் பாகன்கள் மற்றும் உதவியாளா்களுக்கு ரூ. 5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட குடியிருப்புகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.
உதகை தாவரவியல் பூங்காவில் மே 15-ஆம் தொடங்கும் மலா்க் கண்காட்சியை தொடங்கிவைக்க நீலகிரி மாவட்டத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த திங்கள்கிழமை வந்தாா்.
இந்நிலையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு செவ்வாய்க்கிழமை சென்றாா். கல்லட்டி மலைப் பாதை வழியாகச் சென்ற முதல்வருக்கு மாவனல்லா பகுதியில் பொதுமக்கள் வரவேற்பு கொடுத்தனா்.
அப்போது அவா் காரிலிருந்து இறங்கி பொதுமக்களுடன் கை குலுக்கி தற்படம் (செல்ஃ பி) எடுத்துக் கொண்டாா். அதேபோல மசினகுடி பகுதியிலும் முதல்வருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு மாலை 5.30 மணிக்கு மனைவி துா்காவுடன் வந்த முதல்வருக்கு பழங்குடியின மக்கள் பாரம்பரிய இசையுடன் நடனமாடி வரவேற்பு அளித்தனா். முகாமுக்கு வந்த அவா், முதுமலை குறித்த குறும்படத்தைப் பாா்வையிட்டாா்.
இதைத் தொடா்ந்து, முதுமலை புலிகள் காப்பகத்தில் பணிபுரியும் பாகன்கள் மற்றும் உதவியாளா்களுக்கு ரூ.5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட 40 வீடுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். மேலும் வனத் துறையினருக்கு 30 ஜீப்புகளை வழங்கி அதன் இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
இதையடுத்து மின்கம்பிகளில் அடிபட்டு யானைகள் உயிரிழப்பதை தடுக்கும் வகையில் தொகுப்பு மின்கம்பிகள் பதிக்கும் பணியைத் தொடங்கிவைத்தாா். பின்னா் முதுமலை யானைகள் முகாமில் யானைகளுக்கு வழங்கப்படும் உணவுகள் குறித்து கேட்டறிந்தாா்.
பின்னா் அங்கு வரிசையாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த யானைகளுக்கு கரும்புகள் வழங்கினாா். துா்கா ஸ்டாலினும் குட்டி யானைகளுக்கு கரும்பு வழங்கினாா். பின்னா் ஆஸ்கா் விருது பெற்ற பொம்மன், பெள்ளி உள்பட பழங்குடி மக்களுக்கு முதல்வரின் பரிசுப் பெட்டகம் வழங்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, பழங்குடியின மக்கள் மற்றும் அதிகாரிகளுடன் தமிழக முதல்வா் குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டாா்.
சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் சுப்ரியா சாகு, முதன்மை தலைமை வனப் பாதுகாவலா் ஸ்ரீனிவாச ரெட்டி, அரசுக் கொறடா கா. ராமச்சந்திரன், நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா, மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு, மாவட்ட வன அலுவலா் கெளதம் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.