காரைக்காலிலிருந்து கூடுதல் ரயில் இயக்க நடவடிக்கை: ரயில்வே இணை அமைச்சா்
மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு: ராகுல் காந்திக்கு ரயில்வே அமைச்சர் கேள்வி!
தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு விவகாரம் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகின்றது. கல்வித்துறைக்கு ஒதுக்கவேண்டிய நிதி குறித்து கடந்த வாரம் மத்திய கல்வி அமைச்சரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது அவர் தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே தமிழகத்திற்கு நிதி வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இதற்கு தமிழக கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். மேலும், பல மாநிலங்களில் மும்மொழிக் கொள்கை குறித்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
தமிழ் மொழியை மதிப்பதாகவும் வேறு மொழியை இங்கு திணிக்கவில்லை என்றும் மத்திய அரசு தொடர்ந்து கூறி வரும் நிலையில் தமிழ்நாட்டின் மீது ஹிந்தியைத் திணிக்க தொடர்ந்து அவர்கள் முயற்சிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தனது எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டதாவது:
’ஹிந்தி எத்தனை இந்திய மொழிகளை விழுங்யது என எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? போஜ்புரி, மைதிலி, அவதி, பிரஜ், பண்டேலி, கர்வாலி, குமாவோனி, மகாஹி, மார்வாரி, மால்வி, சத்தீஸ்கர், சந்தாலி, அங்கிகா, ஹோ, காரியா, கோர்தா, கூர்மாலி, குருக், முண்டாரி மற்றும் இன்னும் பல இப்போது உயிர்வாழ்வதற்காக மூச்சுத் திணறுகின்றன.
உ.பி. மற்றும் பிகார் ஹிந்தி மாநிலங்கள் அல்ல. அவற்றின் உண்மையான மொழிகள் இப்போது கடந்த கால நினைவுச் சின்னங்களாகிவிட்டன.
இது எங்கே முடியும் என்பது நமக்குத் தெரியும் என்பதால் இதனை தமிழ்நாடு எதிர்க்கிறது. தமிழ் விழித்தது. தமிழின் பண்பாடு பிழைத்தது! சில மொழிகள் ஹிந்திக்கு இடம் கொடுத்தன. இருந்த இடம் தெரியாமல் தொலைந்தன’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிக்க | பிரதமரின் திட்டத்தால் ஏழைகளின் பைகள் காலியாகின்றன: கார்கே
இந்தப் பதிவு குறித்து திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சித் தலைவரான ராகுல் காந்தியிடம் மத்திய ரயில்வே அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதில், “சமூகத்தைப் பிளவுபடுத்தும் இத்தகைய முயற்சிகளால் உங்களுடைய மோசமான நிர்வாகம் ஒருபோதும் மறைக்கப்படாது. எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இந்த விஷயத்தில் என்ன சொல்கிறார் என்பதை அறிவது ஆர்வமாக உள்ளது.ஹிந்தி பேசும் தொகுதியின் எம்.பி.யாக அவர் இதை ஒப்புக்கொள்கிறாரா?” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.