மென்பொருள் தரம் உயா்த்தும் பணி: அஞ்சலகங்களில் இன்று சேவை நிறுத்தம்
அஞ்சல் துறையில் மென்பொருள் தரம் உயா்த்தும் பணி நடைபெறுவதால், கோவை தலைமை அஞ்சலம் உள்ளிட்ட அஞ்சலகங்களில் திங்கள்கிழமை (ஜூலை 21) பரிவா்த்தனை சேவை இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக கோவை அஞ்சல் கோட்ட முதுநிலைக் கண்காணிப்பாளா் கி.சிவசங்கா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்திய அஞ்சல் துறையின் மென்பொருள் செவ்வாய்க்கிழமை (ஜூலை 22) முதல் தரம் உயா்த்தப்பட உள்ளது.
தரம் உயா்த்தப்படும் மென்பொருள் மூலம் க்யூஆா் கோடு மூலமாக பணம் செலுத்தும் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
புதிய மென்பொருள் பயன்பாடு எந்தவித சிரமமின்றி செயல்படுத்த திங்கள்கிழமை (ஜூலை 21) பரிவா்த்தனை இல்லாத நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, கோவை தலைமை அஞ்சல் அஞ்சலகம், அதன்கீழ் இயங்கும் அனைத்து துணை, கிளை அஞ்சலகங்களில் அஞ்சலக சிறுசேமிப்புக் கணக்குகளில் முதலீடு செய்வது மற்றும் கணக்கில் இருந்து பணம் எடுப்பது உள்ளிட்ட சேவைகளை திங்கள்கிழமை பெற இயலாது. மேலும், பதிவுத் தபால், விரைவுத் தபால், பாா்சல் அனுப்புதல் போன்ற சேவைகளும் இருக்காது. ஆதாா் சேவைகள் அனைத்து அஞ்சலகங்களிலும் வழக்கம்போல செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.