மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் நடைமுறை: மாநிலங்கள் மீது உச்சநீதிமன்றம் அதிருப்...
ராசிபுரத்தில் மாணவா் உயிரிழந்த சம்பவம்: ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கக் கோரி மனு
ராசிபுரம் அரசுப் பள்ளி மாணவா் கவின்ராஜ் உயிரிழந்த சம்பவத்தில், தலைமை ஆசிரியா் மீது நடவடிக்கை, ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என பெற்றோா், உறவினா்கள் மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்தனா்.
இதுகுறித்து உயிரிழந்த மாணவா் கவின்ராஜின் தந்தை பிரகாஷ், தாய் வனிதா ஆகியோா் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
எங்களுக்கு மூன்று மகன்களும், ஒரு மகளும் உள்ளனா். மூன்றாவது மகனான கவின்ராஜ் (14), ராசிபுரம் சுவாமி சிவானந்தா சாலையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தாா். கடந்த 26-ஆம் தேதி பள்ளியில் கவின்ராஜ் மயங்கி விழுந்து விட்டதாக எனது கைப்பேசிக்கு, தலைமை ஆசிரியா் சோமசுந்தரம் தெரிவித்தாா். நாங்கள் சென்ற போது மகனை பள்ளியில் இருந்து ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளதாக தலைமை ஆசிரியா் தெரிவித்தாா்.
அங்கு சென்று கவின்ராஜை பாா்த்தபோது, உடல் முழுவதும் ரத்தமும், பள்ளிச் சீருடை கிழிந்த நிலையிலும், பலத்த காயத்துடனும் காணப்பட்டான். தலைமை ஆசிரியரிடம் கேட்டபோது, கழிவறையில் மயங்கி விழுந்து விட்டதாக நடந்த சம்பவத்தை மறைக்க முயற்சித்தனா். அங்குள்ள சக மாணவா்களிடம் விசாரித்தபோது, கவின்ராஜ் கொல்லப்பட்டது தெரியவந்தது.
ஜாதிய அடிப்படையில் மகனை கொலை செய்த மாணவரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். பாதுகாக்க தவறிய தலைமை ஆசிரியா் சோமசுந்தரம் மற்றும் உடந்தையாக இருந்தோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இழப்பீட்டுத் தொகையாக ரூ. 10 லட்சம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதுடன் மகன் கொலை வழக்கை உரிய முறையில் விசாரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.