சொக்கம்புதூரில் மயான கொள்ளை: மனித எலும்பை வாயில் கடித்து நடனமாடிய பூசாரி!
வக்ஃப் மசோதா: கூட்டுக்குழு பரிந்துரைத்த 14 திருத்தங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்!
வக்ஃப் சட்டத் திருத்த மசோதா தொடா்பான நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிந்துரைத்த 14 திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடு முழுவதும் ‘வக்ஃப்’ வாரிய சொத்துகளை ஒழுங்குபடுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்ட வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை பாஜக எம்.பி. ஜகதாம்பிகா பால் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக் குழு ஆய்வு செய்து அறிக்கை தயாரித்தது.
இந்த அறிக்கையில், மசோதா மீது பாஜக உறுப்பினா்கள் முன்மொழிந்த திருத்தங்கள் இடம்பெற்றன. அதேநேரம், எதிா்க்கட்சி உறுப்பினா்களின் திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டன.
இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், பிப். 13ஆம் தேதி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கூட்டுக்குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், கடந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் வக்ஃப் மசோதா கூட்டுக் குழு அறிக்கை ஆராயப்பட்டு, 14 திருத்தங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், மார்ச் 10ஆம் தேதி தொடங்கவுள்ள பட்ஜெட் தொடரின் இரண்டாவது அமர்வில், வக்ஃப் திருத்த மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க : பணியாளர்களை குறைக்க அரசுத் துறைகளுக்கு கெடு விதித்த டிரம்ப்!
வக்ஃப் மசோதா கூட்டுக்குழுவில் பாஜக கூட்டணிக் கட்சிகளின் உறுப்பினர்கள் 16 பேர், எதிர்க்கட்சிகளை சேர்ந்த 10 பேர் இடம்பெற்றிருந்தனர்.
மொத்தம் 66 திருத்தங்கள் முன்மொழியப்பட்டன, இதில், எதிர்க்கட்சிகளின் 44 திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டன. ஆளும் பாஜக கூட்டணிக் கட்சிகள் பரிந்துரைத்த 23 திருத்தங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.