நட்சத்திர பலன்கள்: ஆகஸ்ட் 8 முதல் ஆகஸ்ட் 14 வரை #VikatanPhotoCards
‘வரி மேல் வரி’: பூச்சாண்டி காட்டும் அமெரிக்கா... பலம் காட்டும் இந்தியா!
‘அமெரிக்காவை மீண்டும் கிரேட் ஆக்குவேன்’ என்ற முழக்கத்துடன் இரண்டாம் முறையாக அதிபர் ஆகியிருக்கும் ட்ரம்ப், ஆரம்பத்திலிருந்தே உலக அளவில் பரபரப்பைப் பற்றவைத்துக்கொண்டே இருக்கிறார். ஒரு சமயம் பார்த்தால்... காமெடியாகவும்... ஒரு சமயம் அதிரடியாகவும் இருக்கின்றன, அவருடைய உலகமகா ஆட்டங்கள். அந்த வகையில், இந்தியாவின் மீது கிட்டத்தட்ட 50 சதவிகித அளவுக்கு வரியை விதித்திருக்கும் ட்ரம்ப், ‘இந்தியப் பொருளாதாரம், உயிரற்றப் பொருளாதாரம்’ என்று போகிறபோக்கில் சொல்லி, ஒட்டுமொத்த இந்தியர்களையும் உசுப்பேற்றி இருக்கிறார்.
அவருடைய கருத்து மொத்தமும் உளறல் என்பதற்கு, அகில உலக நாணய நிதியமான ‘ஐ.எம்.எஃப்’ தரும் தரவுகளே போதுமானவை. ‘இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் 2025-26 நிதி ஆண்டில் 6.4% என்ற அளவில் இருக்கும்’ என்று ஐ.எம்.எஃப் கணித்துள்ளது. அதேசமயம், ‘அமெரிக்காவின் ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் 1.9%’ மட்டுமே. உலகிலேயே மிக வேகமாக வளரும் நாடாக இந்தியாதான் இருக்கிறது. பணவீக்கமும் 2.1% அளவுக்கு மிகக்குறைவாக உள்ளது. கடன்களுக்கான வட்டி விகிதமும் பொருளாதாரத்துக்குச் சாதகமாக உள்ளது. இந்தியாவின் கடன் - ஜி.டி.பி விகிதமும் 81 சதவிகிதம். ஆனால், அமெரிக்காவோ 124 சதவிகிதம் என்று மிக அதிகமான கடன் ஜி.டி.பி விகிதத்தில் இருக்கிறது. இந்தியாவின் மேனுஃபாக்சரிங் இண்டெக்ஸ் 59.1... சர்வீசஸ் இண்டெக்ஸ் 59.8 என்கிற அளவில் சிறப்பான நிலையில் உள்ளன.
‘உலகப் பொருளாதாரத்தில் 4-வது இடத்தில் இருக்கும் இந்தியா, இதே வேகத்தில் வளர்ச்சி அடைந்தால், விரைவிலேயே 3-வது இடத்துக்கு முன்னேறும்’ என்று உலகப் பொருளாதார ஆராய்ச்சி நிறுவனங்கள் பலவும் கணித்துள்ளன. ஆக, தரவுகள் அனைத்துமே உள்ளங்கை நெல்லிக்கனியாக இருக்க, இந்தியாவைப் பற்றி எந்தவித அடிப்படையும் இல்லாமல் இஷ்டத்துக்கு ட்ரம்ப் பேசக் காரணம்?
‘‘உலக அரங்கில் இந்தியாவின் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. அந்த வயிற்றெரிச்சலில்தான் அவர் பேசுகிறார். அறிவுபூர்வமாகத் தன் தரப்பு விவாதத்தை முன்வைக்கத் தெரியாதவர்கள் எடுக்கும் முதல் ஆயுதமே, அவதூறுதானே. அமெரிக்காதான் உலகின் வல்லரசு சக்தி. அதனால், யாரை வேண்டுமானாலும் உருட்டி, மிரட்டிப் பணிய வைத்துவிடலாம் என்று நினைக்கிறார். எனவே, இப்படி ட்ரம்ப் உளறுவதில் ஆச்சர்யமில்லை’’ என்கிறார்கள் பொருளாதார அறிஞர்கள் பலரும்.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்த பிரதமர் நரேந்திர மோடியும் தற்போது பொங்கி எழுந்தது போலத்தான் தோன்றுகிறது. “ட்ரம்ப்பின் 50% வரி விதிப்பு நியாயமற்றது. அமெரிக்காவின் நெருக்கடியைச் சமாளிக்க எந்த விலையைக் கொடுக்கவும் தயார்” என்று முதல் தடவையாக இப்போது வாய்திறந்திருக்கிறார் மோடி.
இந்த நிலைப்பாட்டில் எந்த அளவுக்கு இந்தியா உறுதியாக இருக்கிறது என்பதில்தான் இருக்கிறது, நம்முடைய எதிர்காலம்!
- ஆசிரியர்