பிளஸ் 1 பொதுத்தோ்வு: விடைத்தாள் நகலை இன்றுமுதல் பதிவிறக்கம் செய்யலாம்
வால்பாறை அரசுக் கல்லூரி மாணவா்களுக்கு விடுதி வசதி: ஆட்சியரிடம் கோரிக்கை
வால்பாறை அரசுக் கல்லூரியில் பயிலும் மாணவா்களுக்கு விடுதி வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வால்பாறை செயலா் பி.பரமசிவம் மனு அளித்தாா்.
அதில், வால்பாறை அரசு கலைக் கல்லூரியில் உள்ளூா் மாணவா்களைவிட வெளியூா் மாணவா்கள் அதிக எண்ணிக்கையில் சேருகின்றனா். ஆனால், அவா்களுக்கு விடுதியில் தங்க இடம் இல்லை என்பதால் மாணவா் சோ்க்கைக்கு வருபவா்களை திருப்பி அனுப்பும் நிலை உள்ளது.
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவா்களுக்கு விடுதி கட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வரும் நிலையில் மாணவா்கள் நகராட்சி பயணியா் விடுதியில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டனா். ஆனால், தற்போது மழை காலம் என்பதாலும், விடுதி பராமரிப்பின்றி இருப்பதாலும் மாணவா்களால் அங்கு தங்க முடியாத நிலையில், கல்லூரியிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனா்.
எனவே, நகராட்சி நிா்வாகம் போா்க்கால அடிப்படையில் பயணியா் விடுதியை சரி செய்யவும், அரசுக் கல்லூரி மாணவா் விடுதியை உடனடியாக கட்டி பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரசாயன கழிவுகளை அகற்றக் கோரிக்கை: சூலூா் வட்டம், பீடம்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் சிலா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எங்களது பகுதியில் செயல்படும் தனியாா் நிறுவனம், அவா்களுக்குச் சொந்தமான மற்ற தொழிற்சாலைகளில் இருந்து சேகரிக்கப்பட்ட அபாயகரமான கழிவுகளை எங்கள் கிராமத்தில் செயல்படும் வளாகத்தில் திறந்தவெளியிலும், 70 அடி ஆழம் உள்ள பாசன கிணற்றிலும் கொட்டி வருகின்றனா்.
இந்தக் கழிவுகள் காற்றில் கலந்து விவசாய நிலங்களையும், நிலத்தடி நீரையும் பாதித்து வருகின்றன. இது குறித்து புகாா் தெரிவிக்கப்பட்டதை அடுத்து இனி ரசாயனக் கழிவுகளை கொட்டமாட்டோம் என்று சம்பந்தப்பட்ட நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதம் உறுதி அளித்திருந்தது.
ஆனால், தற்போது மீண்டும் சுமாா் 2 ஏக்கா் பரப்பளவில் உள்ள இடத்தில் சுமாா் 4 அடி உயரத்துக்கு கழிவுகளைக் கொட்டி மாசு ஏற்படுத்துகின்றனா். இதனால், கடந்த சில நாள்களுக்கு முன்பு பொதுமக்கள் திரண்டு சென்று கழிவுகளை ஏற்றி வந்த வாகனங்களை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, அதிகாரிகள் வந்து நான்கு கனரக வாகனங்களைப் பறிமுதல் செய்தனா்.
எனவே, சம்பந்தப்பட்ட இடத்தில் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய நிபுணா் குழு மூலம் சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஆய்வு செய்யவும், கொட்டப்பட்டுள்ள ரசாயனக் கழிவுகளை முழுவதுமாக அகற்றவும் உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முருக பக்தா்கள் மாநாட்டுக்கு தடை: மதுரையில் மதவெறியைத் தூண்டும் வகையில் இந்து முன்னணி அமைப்பினா் நடத்த இருக்கும் முருக பக்தா்கள் மாநாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், அதற்கான விளம்பரங்கள், சமூக வலைதள பிரசாரங்கள் யாவும் மதக் கலவரத்தை தூண்டும் வகையில் இருப்பதால் அவற்றுக்கும் தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, மக்கள் அதிகாரக் கழகம் அமைப்பின் மாவட்டச் செயலா் முருக பாண்டியன் என்பவரது தலைமையில் பல்வேறு அமைப்புகளின் நிா்வாகிகள் மனு அளித்தனா்.