செய்திகள் :

கணவரின் கை, கால்களை கட்டிவைத்து சிகரெட்டால் சூடுவைத்த மனைவி: கலிகாலம் முத்திடுத்து

post image

லக்னோ: உ.பி.,யில் கணவரின் கை, கால்களை கட்டிவைத்து சிகரெட்டால் அந்தரங்க உறுப்புகளில் சூடுவைத்து தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து கணவர் அளித்த புகாரின்பேரில் மனைவியை போலீசார் கைது செய்தனர்.
உத்தர பிரதேசம் மாநிலம் பிஜ்னோர் பகுதியை சேர்ந்தவர் மனன் ஸைதி. இவர் மெஹர் ஜஹான் என்ற பெண்ணை திருமணம் செய்து தனியாக வாழ்ந்து வருகிறார். மெஹர் ஜஹான் அடிக்கடி தனது கணவரை அடித்து துன்புறுத்தியுள்ளார். இது தொடர்பாக மனன் போலீசில் புகாரளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் மனைவிக்கு தெரியாமல் வீட்டின் அறையில் கேமராவை பொருத்தினார். சம்பவத்தன்று, போதை கலந்த பாலை கணவருக்கு கொடுத்த மெஹர் ஜஹான், பின்னர் அவரின் கை, கால்களை கட்டிப்போட்டு சித்ரவதை செய்துள்ளார்.

கணவரின் மீது அமர்ந்து அவரது கழுத்தை நெரிக்கிறார்; சிகரெட் புகைத்தப்படி கத்தியால் அந்தரங்க உறுப்பை சேதப்படுத்துகிறார்; அதோடு சிகரெட்டாலும் சூடு வைக்கிறார். இதில் மனன் ஸைதி அலறுகிறார். இந்த காட்சிகள் அடங்கிய வீடியோவை போலீசிடம் ஒப்படைத்து மனன் புகார் அளித்தார். 
இதனையடுத்து கொலை முயற்சி, தாக்குதல் மற்றும் சித்ரவதை செய்தது உள்ளிட்ட குற்றத்திற்காக மெஹரை போலீசார் கைது செய்தனர். குடும்பம் நடத்திய கணவரை, மனைவியே கொடுமையாக சித்ரவதை செய்த நிகழ்வால் மெஹர் ஜஹானை சோசியல் மீடியாவில் திட்டி தீர்த்து வருகின்றனர்.