செய்திகள் :

தமிழக மாணவர்களுக்கு ஐஏஎஸ்., ஐபிஎஸ்., தேர்வுகள் எட்டாக்கனியாக இருப்பதேன்? மொழி சமநிலை இல்லாததுதான் காரணம் என்கிறார்கள் கல்வியாளர்கள்

post image

இந்தியாவின் பொது நிர்வாகத்திலுள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட குடிமைப்பணி அதிகாரிகள் நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். நமது நாட்டின் முதல் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் பட்டேல் 1947ம் ஆண்டு புதுடெல்லியில் உள்ள மெட்காப் ஹவுசில் முதல் பேட்ச் குடிமைப்பணி அதிகாரிகளிடையே உரையாற்றினார். அப்போது அந்த குடிமைப்பணி அதிகாரிகளை “இந்தியாவின் எஃகு சட்டகம்’’ என போற்றி வர்ணித்தார்.

அந்த உரையை நினைவு கூறும் வகையில், ஆண்டுதோறும் ஏப்ரல் 21ம்தேதி (இன்று) “தேசிய குடிமைப்பணிகள் தினம்’’ கடைபிடிக்க முடிவெடுக்கப்பட்டது. புதுடெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் முதல் முறையாக 2006ம் ஆண்டு ஏப்ரல் 21ம் தேதி தேசிய குடிமைப்பணிகள் தினவிழா கொண்டாடப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் குடிமைப்பணிகள் தினம் கொண்டாப்பட்டு வருகிறது. இந்த நாளில் பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்கும் அதிகாரிகளுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து போட்டித்தேர்வு பயிற்றுநர்கள் மற்றும் கல்வியாளர்கள் கூறியதாவது: பள்ளி மாணவர்களிடம் நீ எதிர்காலத்தில் என்னவாக விரும்புகிறாய் என்று கேட்டால்? நான் கலெக்டர் ஆவேன் என்ற பதிலை பெரும்பாலான குழந்தைகள் சொல்வதை கேட்கலாம். அந்தளவிற்கு கலெக்டர் பதவியின் மீது மிகப்பெரிய மதிப்பும் மரியாதையும் உள்ளது. நமது நாட்டில் அரசியல்வாதிகள் நாடாளுமன்றத்திலும், மாநில சட்டமன்றத்திலும் மக்களுக்கு தேவையான நல்ல திட்டங்களை உருவாக்குகிறார்கள்.

அதை மக்களிடத்தில் முழுமையாக கொண்டு சேர்ப்பதிலும், செயல்படுத்துவதிலும் குடிமைப்பணி அதிகாரிகள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அத்தகைய பணிகளை செவ்வேன செய்துவரும் குடிமைப்பணி அதிகாரிகளை ேபாற்றும் வகையில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் சிவில் சர்விஸ் தேர்வுகள் என்பது இந்தியாவில் மதிக்கப்படும் தேர்வுகளில் முதன்மையாக உள்ளது. இந்தியாவில் உள்ள கடினமான தேர்வுகளில் ஒன்றாக இதனை கூறலாம்.

இந்த குடிமைப்பணி தேர்வில் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், ஐஆர்எஸ் போன்ற 21 வகையான பதவிகள் உள்ளன. கல்வித் தகுதியைப் பொறுத்த வரை அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றவர்கள் மற்றும் 21 வயது நிரம்பிய அனைவரும் தேர்வு எழுதலாம். ஓபிசி பிரிவினர் 9 முறையும், பொதுப்பிரிவினர், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் 9 முறையும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் சிவில் சர்விஸ் தேர்வை எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதலாம்.