செய்திகள் :

பருவமழை முன்னெச்சரிக்கை: பாதுகாப்பு உபகரணங்களின் இருப்பு விவரம் கோரியது தமிழ்நாடு மின்வாரியம்

post image

சென்னை: பருவமழை முன்னேற்பாடாக பாதுகாப்பு உபகரணங்கள் இருப்பு விவரத்தை சமர்ப்பிக்க பகிர்மானப்பிரிவு தலைமைப் பொறியாளர்களுக்கு மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழைக்காலம் தொடங்கியுள்ளது. இதுதவிர, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. இந்தச் சூழலில், மின் விநியோகம் பாதிக்கப்படக்கூடாது என்பதில் மின்வாரியம் மிகவும் கவனமாக உள்ளது. இந்நிலையில், தற்போதுள்ள பாதுகாப்பு உபகரணங்கள் கையிருப்பு விவரங்களை மின்வாரியம் கேட்டுள்ளது.


இதுகுறித்து, தலைமைப் பொறியாளர்களுக்கு திட்டப்பிரிவு தலைமைப் பொறியாளர் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: “தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அவசர கால மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் தற்போது பயன்படுத்துவதற்கான தகுதியுடன் இருக்கிறதா, என்பதை அனைத்து மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர்களும் உறுதி செய்ய வேண்டும்.குறிப்பாக, மரம் வெட்டும் இயந்திரம், டீசல் ஜெனரேட்டர், ஏணி, ரப்பர் கையுறை, வெல்டிங் இயந்திரம், கிரேன் லாரி, வாக்கி டாக்கி உள்ளிட்ட 23 உபகரனங்களின் இருப்பு விவரத்தை உடனடியாக தெரிவிக்க வேண்டும்,” அதில் கூறப்பட்டுள்ளது.