செய்திகள் :

மயிலாடுதுறை அருகே 2வது நாளாக தேடுதல் வேட்டை; நள்ளிரவில் மீண்டும் உலா வந்த சிறுத்தை: வால்பாறையில் இருந்து வனத்துறையினர் வருகை

post image

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே கூறைநாடு செம்மங்குளம் சாலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு 11 மணியளவில் சிறுத்தை ஓடிய காட்சி சிசிடிவி கேமராவில் பதிவானது. இந்த தகவல் அறிந்ததும் கூறைநாடு போலீசார் மற்றும் மாவட்ட வன உயிரின காப்பாளர் டேனியல் ஜோசப் தலைமையிலான வன அலுவலர்கள் வந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மேலும் வலைகளை எடுத்து வந்து செம்மங்குளம் பகுதி முழுவதும் சிறுத்தையை தேடினர். ஆனாலும் சிறுத்தையை கண்டுபிடிக்க முடியவில்லை. வீடுகளை விட்டு மக்கள் வெளியே யாரும் வர வேண்டாம் என்று ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

மயிலாடுதுறை கலெக்டர் மகாபாரதி நேற்று மாலை செம்மங்குளம் பகுதிக்கு வந்து வனத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது சிறுத்தையை விரைவில் பிடிக்க தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். பொதுமக்கள் அச்சமின்றி இருக்க அறிவுறுத்த வேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

செம்மங்குளத்தில் ஒரு தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளி அருகில் ஒரு பாழடைந்த கட்டிடம் மற்றும் கட்டிடத்தை சுற்றி மரங்கள் உள்ளது. இதில் ஒரு மரத்தில் வனத்துறை சார்பில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. நேற்று இரவு முழுவதும் வனத்துறையினர் 15 பேர், தீயணைப்பு துறையினர் 25 பேர் மற்றும் போலீசார் இணைந்து 3 பிரிவாக பிரிந்து சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர்.