செய்திகள் :

மெரினா கடற்கரையில் பெண்ணின் கண்ணில் மண்ணை தூவி மணிபர்ஸ் பறிப்பு: கொள்ளையர்களை விரட்டி பிடித்த மக்கள்

post image

சென்னை: மெரினா கடற்கரையில் கணவருடன் பேசிக்கொண்டிருந்த பெண்ணின் கண் ணில் மண்ணைத் தூவி, மணிபர்ஸைபறித்துக் கொண்டு தப்பி ஓடிய வழிப்பறி கொள்ளையர்களை பொதுமக்கள் விரட்டிப் பிடித்தனர்.

அயனாவரத்தைச் சேர்ந்தவர் பிரேம் குமார். இவர் நேற்று காலை தனது மனைவி, 2 குழந்தைகளுடன் மெரினா கடற்கரை, விவேகானந்தர் இல்லம் எதிரே உள்ள மணல் பரப்பில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.பர்ஸை பிடுங்கிக் கொண்டு ஓட்டம்: அப்போது அங்கு வந்த 3 பேர், பிரேம்குமாரின் மனைவி லைசா கண்ணில் மணலை அள்ளி வீசி, அவர் வைத்திருந்த மணிபர்ஸை பிடுங்கி கொண்டு ஓடினர். இதை சற்றும் எதிர்பாராத லைசா கூச்சலிட்டார்.அவரின் அலறல் சத்தம் கேட்டு அங்கு நின்ற சுற்றுலாப் பயணிகள், நடைபயிற்சி மேற்கொண்டிருந்தவர்கள் மற்றும் பிரேம்குமார் ஆகியோர் அவர்களை விரட்டினர். இதில், இருவர் பிடிபட்டனர். அவர்களுக்கு தர்ம அடிகொடுத்து, மெரினா போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

2 பேர் கைது; ஒருவர் தலைமறைவு: விசாரணையில் பிடிபட்டது பெரம்பூரைச் சேர்ந்த மோகன் பாபு (23) மற்றும் கொடுங்கையூரைச் சேர்ந்த 17 வயது சிறுவன் என தெரிய வந்தது. இருவரையும் கைது செய்த போலீஸார், தப்பி ஓடிய அவர்களது கூட்டாளி ஜான்சன் என்பவரை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். மெரினா கடற்கரையில் பட்டப் பகலில் நடந்த இந்த வழிப்பறி சம்பவத்தால் அப்பகுதியி்ல் பரபரப்பு ஏற்பட்டது.