நியோமேக்ஸ் மோசடி: ரூ.15.5 கோடி சொத்துகளை விற்று பாதிக்கப்பட்டோருக்கு வழங்க போலீஸ...
65 சைபர் குற்ற வழக்குகளில் தொடர்புடைய நாமக்கல் டீ கடை தொழிலாளி கைது: வங்கி கணக்கை வாடகைக்கு விட்டதால் சிக்கினார்
சிவகங்கை: நாடு முழுவதும் 65 சைபர் குற்ற வழக்குகளில் தொடர்புடைய நாமக்கல்லைச் சேர்ந்த டீ கடை தொழிலாளியை சிவகங்கை போலீஸார் கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே பெரியநரிக்கோட்டையைச் சேர்ந்தவர் ராபர்ட்(40). இவர் பெங்களூருவில் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிகிறார். ‘முதலீடு செய்தால் பல லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம்’ என்று இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரத்தை நம்பி ஆன்லைனில் முதலீடு செய்தார்.தொடர்ந்து 10 தவணைகளில் ரூ.45 லட்சம் முதலீடு செய்த நிலையில், அவருக்கு ஒரு ரூபாய்கூட கிடைக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர், சிவகங்கை மாவட்ட சைபர் குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் கொடுத்தார். மாவட்ட எஸ்.பி டோங்கரே பிரவீன் உமேஷ் தலைமையில் கூடுதல்எஸ்.பி நமச்சிவாயம், காவல் ஆய்வாளர் தேவி, எஸ்ஐ முருகானந்தம்தலைமையிலான சைபர் குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர்.இதில் ரூ.45 லட்சத்தில் ரூ.15லட்சம் நாமக்கல் அருகே நல்லிபாளையத்தைச் சேர்ந்த டீ கடை தொழிலாளி தினேஷ்குமாரின்(34) வங்கிக் கணக்குக்கு சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: தினேஷ்குமார் கடன் பிரச்சினையில் இருந்துள்ளார். பணத் தேவை இருந்ததால் அவரதுநண்பர் மூலம் தனது வங்கிக் கணக்கை ஒரு சதவீத கமிஷனுக்கு கம்போடியா நாட்டு மோசடி கும்பலுக்கு வாடகைக்கு விட்டார்.
அவரது வங்கி கணக்கு மூலம் நாடு முழுவதும் 65 பேரிடம் மோசடி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.3 கோடி வரை அவரது வங்கிக் கணக்கில் வரவாகியுள்ளது. இதற்காக ரூ.3 லட்சம் கமிஷன் கொடுத்துள்ளனர். தற்போது வங்கிக் கணக்கில் இருந்த ரூ.19 லட்சத்தை முடக்கிவிட்டோம்.
இதுபோன்ற மோசடிகளில் கம்போடியா, யுஏஇ நாடுகளைச் சேர்ந்தகும்பல் ஈடுபட்டு வருகிறது. இதனால் ஆன்லைனில் வரும் விளம்பரங்களை நம்பி பணத்தை முதலீடுசெய்ய வேண்டாம். அதேபோல் கடன் செயலி மூலமாகவும் மோசடிசெய்கின்றனர். சைபர் குற்றங்கள் தொடர்பான புகார்களை ‘1930’ என்றஇலவச எண்ணில் தெரிவிக்க லாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.