செய்திகள் :

கும்மிடிப்பூண்டி | குடிபோதையில் வெறிச்செயல்; கூட்டு வன்கொடுமை செய்து பெண் கொலை: 3 இளைஞர்கள் கைது

post image

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே மாதர்பாக்கம் பகுதியில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து பெண் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள மாதர்பாக்கம் கிராமத்தில் பெட்ரோல் நிரப்பும் நிலையத்தின் பின்புறம் உள்ள வயல்வெளியில் கடந்த 9-ம் தேதி 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இறந்து கிடந்தார்.இதுகுறித்து, தகவலறிந்த பாதிரிவேடு போலீஸார் விரைந்து சென்று, பெண்ணின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், அந்த இடத்தில் கிடந்த சட்டை, காலி மதுபாட்டில், அரசு பேருந்தின் 20 ரூபாய் பயணச்சீட்டு, பெட்ரோல் பங்க் மற்றும் அரசு மதுபான கடையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணையில் ஈடுபட்டனர்.

அவ்விசாரணையின் அடிப்படையில், பாதிரிவேடு பகுதியைச் சேர்ந்த சூர்யா( 25), தேர்வாய்கண்டிகையை சேர்ந்த சுரேந்தர்(22), கண்ணம்பாக்கத்தைச் சேர்ந்த ஜெபக்குமார்(21) ஆகிய 3 பேரை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.

கைதானவர்களிடம் போலீஸார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்ததாவது: கொலை செய்யப்பட்ட பெண், கடந்த 8-ம் தேதி இரவு, மாதர்பாக்கத்தில் உள்ள அரசு மதுபானக் கடையில் மது வாங்கிக் கொண்டு வயல்வெளிக்குச் சென்றுள்ளார். இதைப் பார்த்த, ஏற்கெனவே மதுபோதையில் இருந்த சூர்யா உள்ளிட்ட 3 பேரும் அந்த பெண்ணை பின் தொடர்ந்து சென்றுள்ளனர்.சூர்யா அந்த பெண்ணிடம் பேச்சுக் கொடுத்துள்ளார். அப்போது, பெண் மது போதையில் இருந்ததை பயன்படுத்தி சூர்யா, சுரேந்தர், ஜெபக்குமார் ஆகியோர், அப்பெண்ணை தாக்கி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். இவ்வாறு விசாரணையில் தெரிய வந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொலை செய்யப்பட்ட பெண்ணை அடையாளம் காணும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.