செய்திகள் :

பிறவி இருதய குறைபாடு: ஆபரேஷன் இல்லாமல் சிகிச்சை; தஞ்சை அரசு மருத்துவமனை சாதனை

post image

தஞ்சாவூர்: பிறவி இருதய குறைபாடு உள்ள நோயாளிகளுக்கு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை இல்லாமல் வெற்றிகரமாக சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவக் கல்லூரி முதல்வர் ஆர்.பாலாஜி நாதன், “தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த ஆண், பெண் மற்றும் ஒரு குழந்தை ஆகிய மூன்று நபர்கள் இருதய தடுப்புச் சுவர் இல்லாத பிறவி குறைபாடுடன் இங்கு அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கு அறுவை சிகிச்சை இல்லாமல் கேத்லேப் மூலம் இருதய குறைபாடு வெற்றிகரமாக அரை மணி நேரத்தில் சரி செய்யப்பட்டுள்ளது.கேத்லேப் சிகிச்சை மூலம் தற்போது வரை நான்கு குழந்தைகள் உள்ளிட்ட ஆறு பேருக்கு இருதய சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் 4,000 நபர்களுக்கு இருதய அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்த அரிதான அறுவை சிகிச்சை சென்னை, கோவைக்கு அடுத்தபடியாக தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் தான் செய்யப்பட்டுள்ளது.இந்த அறுவை சிகிச்சை தனியார் மருத்துவமனையில் செய்தால் மூன்று லட்சம் வரைக்கும் செலவாகும். அத்துடன் 15 நாட்கள் ஓய்வெடுக்க வேண்டிய நிலையும் ஏற்படும். ஆனால் அப்படி எதுவும் இல்லாமல் அரை மணி நேரத்தில் இந்த அறுவை சிகிச்சை காப்பீட்டு திட்டத்தின் கீழ் செய்யப்பட்டுள்ளது” என்றார்.