செய்திகள் :

மதுரை திருமங்கலம் அருகே ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6-ஆக உயர்வு

post image

மதுரை: திருமங்கலம் அருகே ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6-ஆக அதிகரித்துள்ளது. மதுரையில் இருந்து இன்று அதிகாலை கனகவேல் (61) தனது குடும்பத்துடன் காரில் தளவாய்புரம் சென்று அங்கிருந்து வில்லாபுரம் நோக்கி வந்துள்ளார். விருதுநகர்-திருமங்கலம் நான்கு வழிச்சாலையில் சிவரக்கோட்டை பேருந்து நிலையம் அருகே கார் சென்றுகொண்டிருந்தபோது, கொய்யாப்பழ வியாபாரி பாண்டி, இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முற்பட்டார்.

இருசக்கர வாகனத்தில் வந்த வியாபாரி மீது மோதாமல் இருப்பதற்காக காரில் திடீர் பிரேக் போட்டு நிறுத்த முயன்றார். ஆனால் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி இருசக்கர வாகனம் மீது மோதியது. அதிவேகமாக வந்த கார் அத்துடன் நிற்காமல் சாலையில் இருந்த தடுப்பு கம்பியிலும் மோதி தலை குப்புற கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே குழந்தை உள்பட 5 பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் மூவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இருசக்கர வாகனத்தில் சென்ற பாண்டி (48), சிவ ஆத்மிகா (8), கனகவேல் (61), கிருஷ்ணகுமாரி (58), நாகஜோதி (45), சிவஸ்ரீ உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து இச்சம்பவம் பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.