செய்திகள் :

ரேஷன் கடைகளில் கனடியன் மஞ்சள் நிற பருப்பு ஏன்? - தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

post image

சென்னை: பொது விநியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் வழங்க குறைந்த விலை கொண்ட மசூர் பருப்பை வழங்காமல், அதிக விலை கொண்ட கனடியன் மஞ்சள் நிற பருப்பை கொள்முதல் செய்வது ஏன் என்பது குறித்து தமிழக அரசு இரு வாரங்களில் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிவப்பு நிறம் கொண்ட மசூர் பருப்பை குறைந்த விலையில் மாநிலங்கள் பெற்று, பொது விநியோக திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு விநியோகிக்கலாம் என மத்திய உணவுத்துறை அனைத்து மாநில அரசுகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது. ஆனால், தமிழக அரசு பொது விநியோக திட்டத்துக்கான இ-டெண்டரில் மசூர் பருப்பை சேர்க்கவில்லை எனக்கூறி பருப்பு மொத்த வியாபாரம் செய்து வரும் தனியார் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. அதில், ‘மசூர் பருப்பை போல கேசரி பருப்பும் இருப்பதால் மசூர் பருப்பில் கலப்படம் செய்ய வாய்ப்பு இருப்பதாகக்கூறி மசூர் பருப்பை கொள்முதல் செய்யும் அறிவிப்பாணையை தமிழக அரசு கடந்த 2007-ம் ஆண்டு திரும்பப்பெற்றது. பின்னர் மசூர் பருப்பின் சத்துக்களை கருத்தில் கொண்டு மீண்டும் கடந்த 2017-ம் ஆண்டு முதல் கொள்முதல் பட்டியலில் மசூர் பருப்பு சேர்க்கப்பட்டது.ஆனால் கடந்த பிப்.14 அன்று தமிழக அரசு பிறப்பித்துள்ள இ-டெண்டர் அறிவிப்பில் மீண்டும் மசூர் பருப்பு இடம்பெறவில்லை. இதை எதிர்த்து எங்களது நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், எங்களது கோரிக்கையை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால், எங்களது கோரிக்கையை தமிழக அரசு நிராகரித்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 1961-ம் ஆண்டு முதற்கொண்டு தமிழகத்தில் கேசரி பருப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பதை தமிழக அரசு அதிகாரிகள் கவனத்தில் கொள்ளவில்லை.இந்நிலையில் 20 ஆயிரம் மெட்ரிக் டன் கனடியன் மஞ்சள் கலர் துவரம் பருப்பை கொள்முதல் செய்ய கடந்த மே மாதம் 27-ம் தேதியன்று தமிழக அரசு டெண்டர் கோரியது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருக்கும்போதே கடந்த ஜூன் 13 அன்று கனடியன் மஞ்சள் நிற பருப்பை சப்ளை செய்யும் நிறுவனங்களுக்கு தமிழக அரசு டெண்டர் வழங்கியுள்ளது.

மசூர் பருப்பைக் காட்டிலும் கனடியன் மஞ்சள் நிற பருப்பு விலை அதிகமானது. இதன்மூலம் ரேஷன் கடைகளில் பருப்பை விலைக்கு வாங்கும் பொதுமக்களும் பாதிக்கப்படுவர். எனவே, ரேஷன்கடைகளில் முன்பு போல மசூர் பருப்பை கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும். கனடியன் மஞ்சள் நிற பருப்பை கொள்முதல் செய்ய தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்’ என கோரியிருந்தது.