செய்திகள் :

விஜயகாந்த் நினைவிடத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும்: தேமுதிக சார்பில் கமிஷனர் அலுவலகத்தில் மனு

post image

சென்னை: கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தேமுதிக சார்பில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தேமுதிக மாநில வழக்கறிஞர் அணி துணை செயலாளர் சந்தோஷ்குமார் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: சென்னை கோயம்பேடு கட்சி தலைமை அலுவலகத்தில் மறைந்த விஜயகாந்த் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தினமும் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து பார்வையிட்டு செல்கின்றனர். இந்நிலையில் கடந்த 5ம் தேதி முதல் நினைவிடத்தில் பொதுமக்கள் பாதுகாப்புக்கு காவல்துறையில் இருந்து காவலர்கள் யாரும் அமர்த்தப்படவில்லை. எனவே தயவுகூர்ந்து விஜயகாந்த் நினைவிடத்தை பார்வையிட வரும் பொதுமக்களுக்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.