செய்திகள் :

வேப்பூர் அருகே 6 கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்து

post image

விருத்தாசலம்: திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இரவு வேப்பூர் அருகே 6 கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானது.

சென்னையில் வசிக்கும் தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், மக்களவைத் தேர்தலில் வாக்களிப்பதற்காக தங்களது சொந்தஊருக்குச் சென்று வாக்களித்துவிட்டு நேற்று முன்தினம் மீண்டும் சென்னை நோக்கி பயணித்தனர். அந்த வகையில் நேற்று முன்தினம் இரவு ஆயிரக் கணக்கான கார்கள் சென்னை நோக்கி பயணித்த வண்ணம் இருந்தன. அதன்படி தஞ்சையைச் சேர்ந்த ஐடி நிறுவன ஊழியர் பிரபு என்பவர் தனது மனைவி சரண்யாவுடன் சென்னை நோக்கி பயணித்தார்.கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த சிறுநெசலூர் அருகே வந்தபோது, திடீரென கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானது. இதில், சென்னை காட்டுப் பாக்கத்தைச் சேர்ந்த சந்திர சேகர் மனைவி ராஜேஸ்வரி ( 70 ), பிரபு மனைவி சரண்யா ஆகியோர் காயமடைந்தனர். இருவரும் வேப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் சென்னை சென்றனர். பிரபு, சந்திர சேகர் உள்ளிட்டோரின் கார்கள் சேதமடைந்தன. இந்த விபத்து குறித்து வேப்பூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.