Vijay: "சினிமாவில்தான் விஜய் ஹீரோ; நிஜத்தில் அவர் வில்லன்" - டி.டி.வி. தினகரன் க...
`அமெரிக்க இடைத்தேர்தல் முடிந்தவுடன் ஈரான் போர் முடிவுக்கு வரும்' - டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடந்து வரும் போர் சமீபத்தில் ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் சூடுபிடித்து இருக்கிறது. ஈரானில் இருக்கும் ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில் இரு நாடுகளும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
ஈரானோடு தொடர்புடைய 5 டேங்கர் கப்பல்களை அமெரிக்கா கடற்படையினர் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தி மூழ்கடித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த ஈரானும் ஹார்மூஸ் ஜலசந்தியில் தொடர்ந்து கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்காவுடனான தனது மோதலை மேலும் தீவிரப்படுத்தும் விதமாக, ஹோர்முஸ் ஜலசந்திக்கு அருகே புதன்கிழமை பத்துக்கும் மேற்பட்ட கப்பல்களைத் தாக்கியதாகவும், ஹார்மூஸ் நீர்வழிப்பாதைக்கு அப்பால் புதிதாக அறிவிக்கப்பட்ட 'செல்ல முடியாத மண்டலத்தை' விரிவுபடுத்தி இருப்பதாக ஈரான் கூறியுள்ளது.
முதன்முறையாக, ஈரானின் புரட்சிகரப் படைகள் ஓமன் வளைகுடா மற்றும் அரபிக்கடலின் சில பகுதிகளிலும் தடைசெய்யப்பட்ட மண்டலத்தை விரிவுபடுத்தியுள்ளன. விதிகளை மீறி இப்பகுதிக்குள் நுழையும் கப்பல்கள் நடவடிக்கைகளுக்கு உள்ளாகும் என்று அப்படையின் செய்தித் தொடர்பாளர் ஹொசைன் மொஹேபி எச்சரித்தார்.

ஈரானிய அரசு ஊடகங்களின் தகவலின்படி, அப்பகுதி வழியாகச் செல்ல முயன்ற அமெரிக்காவின் இரண்டு கப்பல்கள், எட்டு எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்கள் மற்றும் ஈரான் உத்தரவுகளுக்கு இணங்காத 10 கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரானின் புரட்சிகரப் படை தெரிவித்துள்ளது.
8 அமெரிக்க போர் விமானங்கள் சேதம்
அமெரிக்க கடற்படையினர் ஈரானின் 5 டேங்கர்களை மூழ்கடித்து இருப்பதால் ஜோர்டானில் உள்ள முவாஃபக் சால்டியில் செயல்படும் அமெரிக்க கடற்படை தளத்தில் ஈரான் அதிரடி தாக்குதல் நடத்தியது. இதனை தடுக்கும் விதமாக ஜோர்டானில் உள்ள அமெரிக்கப் படைகள், ஈரானியத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக 30-க்கும் மேற்பட்ட பேட்ரியாட் ஏவுகணைகளை ஏவின.
முவாஃபக் சால்டி விமானத் தளத்தின் மீதான ஈரானியத் தாக்குதலின்போது, 'வார்தாக்' (Warthog) என்று அழைக்கப்படும் ஒரு A-10 தண்டர்போல்ட் (A-10 Thunderbolt) விமானம் தாக்கப்பட்டு அதன் ஒரு இறக்கை சேதமடைந்தது; அதேவேளையில், சுமார் எட்டு F-15 ரக விமானங்கள் லேசான சேதமடைந்தாலும் பின்னர் மீண்டும் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டதாக கூறப்படுகிறது.
மோதல் மீண்டும் அதிகரித்து இருப்பதால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 100 டாலரை தாண்டிவிட்டது. இந்த போர் 2029ம் ஆண்டு வரை நீட்டிக்க வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பிடம் அவரது ஆலோசகர்கள் எச்சரித்துள்ளனர். தனது ஆலோசகர்களுடன் டொனால்டு ட்ரம்ப் ஆலோசனை நடத்தியபோது இதனை தெரிவித்துள்ளனர். ஈரானுடனான மோதல் ஏழாவது மாதத்தில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், ஈரானால் இனிமேலும் தாக்குப்பிடிக்க முடியாது என்று தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், நவம்பரில் நடைபெறவுள்ள அமெரிக்க இடைக்காலத் தேர்தல்களுக்குப் பிறகு அந்தப் போர் உடனடியாக முடிவுக்கு வரும் என்று தெரிவித்துள்ளார்.

டல்லாஸில் நடைபெறவுள்ள குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டிற்குப் புறப்படுவதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், ஈரான் இனிமேலும் தாக்குப்பிடிக்க முடியாது என்பதால், தேர்தலுக்குப் பிறகு உடனடியாகப் போர் முடிவுக்கு வரும்.
ஈரானை அதன் போக்கில் விட்டுவிட்டு, அணு ஆயுதங்களை உருவாக்க அனுமதிக்கும் வகையில், பலவீனமான ஒரு குழுவினர் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படுவதற்காக, நவம்பர் மாதத் தேர்தலில் தனது செல்வாக்கை பயன்படுத்த ஈரான் முயல்வதாகவும் டிரம்ப் குற்றம் சாட்டினார். போர் மற்றும் தீவிரமடைந்து வரும் வாழ்க்கைச் செலவு நெருக்கடி ஆகியவற்றால் அமெரிக்க வாக்காளர்கள் மத்தியில் அதிருப்தி அதிகரித்து வரும் நிலையில், நவம்பர் 3-ஆம் தேதி நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தல்கள் டிரம்ப் நிர்வாகத்திற்கு ஒரு முக்கிய சோதனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.!
















