Mandaadi: "'பார்க்குறதுக்கு எம்.ஆர். ராதா மாதிரியே இருக்கீங்க'னு சொல்லும்போது......
"அமைச்சர் பதவி கிடைத்ததால்தானே நீங்கள் கூட்டணி மாறினீர்கள்" - திருமாவளவனுக்கு பிரேமலதா பதிலடி
விசிக தலைவரும், எம்பியுமான திருமாவளவன் சமீபத்தில் கலந்துகொண்ட திருமண நிகழ்ச்சியில் பேசியபோது, "நீண்டகாலம் திமுகவோடு பயணித்த கட்சிகளுக்கான தொகுதிகளைக் குறைத்து, திடுமெனக் கூட்டணியில் இணைந்த கட்சிக்கு யாரும் எதிர்பாராத அளவு தொகுதிகளைத் தந்தபோது, ஏற்கெனவே இருந்த கட்சிகளுக்கு மகிழ்ச்சி அளித்திருக்குமா?
நல்லுறவு, நல்லிணக்கத்தை கூட்டணிக் கட்சிகளுடன் பேணி பாதுகாக்கும் பொறுப்பு தலைமை தாங்கும் கட்சியிடம்தான் உள்ளது” என்று தேமுதிகவைச் சாடியிருந்தார்.

இந்நிலையில் இன்று (செப்.16) செய்தியாளர்களைச் சந்தித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்திடம் திருமாவளவன் பேசியது தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், "சகோதரர் வன்னிய அரசுக்கு அமைச்சர் பதவி கிடைத்தது. அதனால் நீங்கள் (விசிக) கூட்டணி மாறினீர்கள், இதுதானே உண்மை? கம்யூனிஸ்டுகளைப் போல் நீங்களும் இருந்திருக்கலாமே? நீங்கள் விரும்பியது அமைச்சர் பதவி. நீங்கள் வென்றது இரண்டு இடங்கள். அதில் ஒருவருக்கு அமைச்சர் பதவி என்பதால் போயிருக்கிறீர்கள். இதற்காக நீங்கள் எதற்கு தேமுதிகவை இழுக்கிறீர்கள். மாற்றி மாற்றிப் பேசாதீர்கள்.
முடிவெடுக்க வேண்டியது திமுகவும் அதன் தலைமையும்தான். அப்படிப் பார்த்தால் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட 2 தொகுதிகளை அண்ணன் ஸ்டாலின் கூடுதல் இடமாகவே கொடுத்திருக்கிறார்; அதை நாங்கள் கேட்க முடியுமா? நாங்கள் ஏன் அதைப் பற்றிப் பேசவில்லை?

அதனால், நாம் வேறு ஒரு நிலைப்பாட்டை எடுத்துவிட்டு, அடுத்தவர் மீது குற்றம் சொல்வது மிக மிகத் தவறான செயல். அதை அண்ணன் திருமாவளவன் செய்ய மாட்டார் என்று நம்புகிறேன்.
இனிமேலும் அதுபற்றி அவர் பேச மாட்டார் என்று நினைக்கிறேன். மீண்டும் அவர் அதைப் பற்றிப் பேசினால், ‘குப்புற விழுந்தும் என் மீசையில் மண் ஒட்டவில்லை’ என்ற கதையாகிவிடும்" என்று தெரிவித்திருக்கிறார்.














