வங்கதேசத்தில் மீண்டும் வேகமெடுக்கும் தட்டம்மை ஆயிரத்தை நெருங்கிய உயிரிழப்புகள்! ...
நாதக: 'இடைத்தேர்தலில் கண்டிப்பா போட்டியிடணுமா?' - தயக்கத்தில் தம்பிகள்.. சீமான் முடிவென்ன?
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் 'நாம் கண்டிப்பாக போட்டியிட வேண்டுமா..' என்ற கேள்விகள் நா.த.க சீனியர்கள் மத்தியில் எழுந்துள்ளது. நிர்வாகிகளின் விருப்பத்துக்கு மாறாக 'கண்டிப்பாக போட்டியிட வேண்டும்' என்ற மூடில் இருக்கிறாராம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்!

அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் மதுராந்தகம் மரகதம் குமரவேல், தாராபுரம் சத்யபாமா, கரூர் எம்.ஆர் விஜயபாஸ்கர், விராலிமலை சி விஜயபாஸ்கர், அம்பாசமுத்திரம் இசைக்கி சுப்பையா, பெருந்துறை ஜெயக்குமார் ஆகியோர் தங்கள் எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க-வில் இணைந்தனர்.
இரண்டு தொகுதிகள் வென்ற முதல்வர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் 7 தொகுதிகள் காலியானதாக அறிவித்தது தேர்தல் ஆணையம். தற்போது 2 தொகுதிகளுக்கு மட்டும் இடைத் தேர்தல் அறிவிப்பு வந்துள்ளது. அதன்படி அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

தி.மு.க சார்பில் பரந்தாமன் போட்டியிடுவதாகவும் த.வெ.க சார்பில் மரகதம் குமரவேல் போட்டியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க-வும் விரைவிலேயே வேட்பாளரை அறிவிக்கவுள்ளது. இந்நிலையில் 'நாம் இந்த தேர்தலில் கண்டிப்பாக போட்டியிட வேண்டுமா... 2026 சட்டமன்றத் தேர்தல் தோல்வியால் கட்சியே கலகலத்துப் போயிருக்கும் சூழலில் இடைத்தேர்தலை புறக்கணித்துவிட்டு மறுசீரமைப்பு பணிகளில் கவனம் செலுத்தலாம்... பொதுத் தேர்தலின்போதே மதுராந்தகத்தில் 4900 வாக்குகள்தான் பெற்றிருக்கிறோம். தாராபுரத்தில் 6000 வாக்குகள் வாங்கியிருக்கிறோம்..

இடைத்தேர்தலில் போட்டியிட்டால் அந்த வாக்குகளும் குறையலாம்' என்ற பேச்சு கட்சிக்குள் ஓடிக் கொண்டிருக்கிறது. எனவே, குதிரைபேரத்தால் எம்.எல்.ஏ-வை இழந்திருக்கும் அ.தி.மு.க-வுக்கு ஆதரவாகவோ அல்லது புறக்கணிக்கும் முடிவையோ எடுக்கலாம்' என நினைக்கிறார்கள்.
நம்மிடம் பேசிய நா.த.க சீனியர்கள், "த.வெ.க-வை சகட்டுமேனிக்கு விமர்சிக்கிறார்கள் நா.த.க-வின் பிரபல நிர்வாகிகள். இச்சூழலில் களத்தில் த.வெ.க-வை எதிர்க்கவும் வீழ்த்தவும் சரியாக வியூகத்துடன் செல்ல வேண்டும். இடைத்தேர்தலுக்கான செலவுகளும் மிகப்பெரியது. வியூகமும் பணமும் இல்லாமல் வெறுமனே கடமைக்கு போட்டியிட்டு சொற்ப வாக்குகளை பெற்றால் அது கட்சிக்கு பெரும் பின்னடைவைத் தரும். எனவே அண்ணன் உடனடியாக பொறுப்பாளர்களின் கூட்டத்தைக் கூட்டி விவாதத்துக்கு பிறகே ஒரு முடிவை எடுக்க வேண்டும்" என்றனர்

தலைமைக்கு நெருக்கமானவர்களிடம் பேசினோம் "இரண்டு தொகுதி இடைத் தேர்தலில் நாம் போட்டியிடுகிறோம் என அண்ணன் சொல்லிவிட்டார். விரைவிலேயே வேட்பாளர் பட்டியல் வெளிவரும். ஆளும்கட்சிக்கு எதிரான விமர்சனங்களை முன்வைத்து தேர்தலை சந்திப்போம் அவ்வளவுதான்" என்றனர்.




















