Orangutans: ஒடிசாவில் கைவிடப்பட்ட 5 ஒராங்குட்டான் குட்டிகள்; கடத்தல் கும்பல்களி...
இடைத்தேர்தலில் திமுக: முன்னாள் விசிக MLA-வை வைத்து ஸ்டாலின் போடும் கணக்கு... ரேஸில் யார் யார்?
இடைத்தேர்தலில் தி.மு.க போட்டியிடுமா.. புறக்கணிக்குமா.. என்ற குழப்பம் ஒருபக்கம் இருந்தாலும், இடைத்தேர்தலில் தி.மு.க தரப்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்ற விவாதம் ஓடிக் கொண்டிருக்கிறது.
இச்சூழலில் தி.மு.க உத்தேச வேட்பாளர் பட்டியல் குறித்து அறிவாலய வட்டாரத்தில் விசாரித்தோம்.

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு இடைத் தேர்தலை அறிவித்திருக்கிறது இந்திய தேர்தல் ஆணையம். 2026 சட்டமன்றத் தேர்தலில், த.வெ.க ஆட்சியமைத்த நிலையில் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் மதுராந்தகம் மரகதம் குமரவேல், தாராபுரம் சத்யபாமா, கரூர் எம்.ஆர் விஜயபாஸ்கர், விராலிமலை சி விஜயபாஸ்கர், அம்பாசமுத்திரம் இசைக்கி சுப்பையா, பெருந்துறை ஜெயக்குமார் ஆகியோர் ராஜினாமா செய்தார்கள்.
இரண்டு தொகுதிகள் வென்ற முதல்வர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் 7 தொகுதிகள் காலியானதாக அறிவித்தது தேர்தல் ஆணையம். இந்நிலையில் 2 தொகுதிகளுக்கு மட்டும் இடைத் தேர்தல் அறிவிப்பு வந்துள்ளது. அதன்படி அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது!
நம்மிடம் பேசிய தி.மு.க சீனியர்கள், "இடைத் தேர்தலை தி.மு.க புறக்கணித்து அ.தி.மு.க-வை வெற்றிபெற வைக்க வேண்டும் என்ற கருத்துகள் விவாதிக்கப்பட்டது உண்மைதான். ஆனால், அது பெரும் பின்விளைவுகளை ஏற்படுத்தும் என கருதுகிறது தி.மு.க தலைமை.
'சட்டமன்றத்தில் அப்பாவை காணும்' என நக்கலாக பேசிய விஜய், 'களத்தில் தி.மு.க-வை காணும்' என இடித்துரைப்பார். இது தேவையற்ற குழப்பத்தை கட்சிக்குள் ஏற்படுத்தும். எனவே தேர்தலில் தி.மு.க களமிறங்கும் வாய்ப்புகளும் உள்ளன.
எனவே, வேட்பாளர்கள் தேர்வு செய்வது தொடர்பான விவாதங்கள் கட்சிக்குள் எழுந்துள்ளன. மதுராந்தகம் தொகுதியில் கடந்தமுறை போட்டியிட்ட அமுலு பொன்மலர்மீது எக்கசெக்க அதிருப்திகள் இருக்கின்றன. 'எப்படியும் நாம் வெற்றிபெற மாட்டோம்' என மனநிலையில்தான் கடந்தமுறையே பணியாற்றினார். ஆகவே வி.சி.க-விலிருந்து விலகி தி.மு.க-வில் இணைந்த செய்யூர் முன்னாள் எம்.எல்.ஏ பனையூர் பாபுவை களமிறக்கலாம் என தலைமை ஆலோசிக்கிறது.

2021 முதல் 2026 வரை செய்யூர் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்தபோது அரசுக் கலை கல்லூரி, சிப்காட் உள்ளிட்ட திட்டங்களை கொண்டுவந்திருப்பதால் அதனையொட்டிய மதுராந்தகம் தொகுதியில் அவர் நிற்க வாய்ப்பிருக்கிறது. பனையூர் பாபு நிற்பதால் அவரது செல்வாக்கில் வி.சி.க வாக்குகளையும் நிர்வாகிகளையும் தி.மு.க பக்கம் இழுக்கலாம் என நினைக்கிறது தலைமை. செங்கல்பட்டு மாவட்டத்தில் செல்வாக்கு மிகுந்தவர் என்பதால் இவரையே உறுதிசெய்யவும் வாய்ப்பிருக்கிறது" என்றனர்.
தாராபுரம் தொகுதியில் 2021 சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர் எல்.முருகனை எதிர்த்து போட்டியிட்டு, வென்று அமைச்சரானார் கயல்விழி செல்வராஜ். முன்னாள் அமைச்சர் மு.பெ சாமிநாதனுடம் ஈகோ மோதல் நிலவியதால், அவரது பவரை பயன்படுத்தி 2026-ல் கயல்விழிக்கு சீட் கிடைக்காமல் பார்த்துக் கொண்டார் மு.பெ.

இந்நிலையில், 2026 தேர்தலில் போட்டியிட்ட இந்திராணிக்கு லோக்கல் செல்வாக்கு சுத்தமாக இல்லை. எனவே கயல்விழி செல்வராஜுக்குத்தான் சீட் கொடுக்க அதிக வாய்ப்புகள் உண்டு. மதுராந்தகத்துக்கு பனையூர் பாபு, தாராபுரத்துக்கு கயல்விழி செல்வராஜ் ஆகியோரை நிறுத்துவது தலைவர் மு.க ஸ்டாலின் விருப்பம். இருந்தாலும் கட்சி சர்வே முடிவுகள், சீனியர்கள் கருத்து, மாவட்டச் செயலாளர்களின் விருப்பத்தை கேட்டுக் கொண்டு முடிவெடுப்பார்" என்றனர்.
















