' ரூ.1,200 கோடியில் புதிய தலைமைச் செயலகம்.!' - முதல்வர் விஜய் அறிவிப்பு!
`200 ஆண்டுகளுக்கு பிறகு பிறந்த பெண் குழந்தை' - ராஜ மரியாதையுடன் ரதத்தில் அழைத்து வந்த குடும்பத்தினர்
மகாராஷ்டிராவில் பெண் குழந்தை பிறந்ததை ஒரு குடும்பம் விழாவாக எடுத்து கொண்டாடி இருக்கிறது. மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தில் உள்ள பார்லி என்ற நகரை சேர்ந்த தஹிபாலே குடும்பத்தினர், தங்கள் குடும்பத்தில் சுமார் 200 ஆண்டுகளுக்கு பிறகு, அதாவது நான்கு தலைமுறைகளுக்குப் பிறகு பிறந்த முதல் பெண் குழந்தையான 'கார்கி'யின் பிறப்பை வெகு விமரிசையாகக் கொண்டாடினர்.
பெண் குழந்தை பிறந்ததை விமரிசையாக கொண்டாடும் விதமாக அந்தப் பெண் குழந்தையையும் அவளது தாயையும் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அழைத்து வர, அழகாக அலங்கரிக்கப்பட்ட ரதம் ஒன்று பயன்படுத்தப்பட்டது. இத்துடன் பாரம்பரிய மேள தாளங்கள், வாத்தியங்கள், நடனம் மற்றும் அக்கம்பக்கத்தினர் பங்கேற்ற உற்சாகமான ஊர்வலத்தில் அவர்கள் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்.

தங்களுக்கு இரண்டு நூற்றாண்டுகளாக பெண் குழந்தை பிறக்கவில்லை என்றும், இதற்காக மிகவும் கவலைப்பட்டதாகவும், அக்கவலை இப்போது நீங்கி இருப்பதாக தஹிபாலே குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இது குறித்து குழந்தையின் தாத்தா லிம்பாஜி தஹிபாலே கூறுகையில்,''பெண் குழந்தை பிறப்பது பெரும் பாக்கியம். கார்கியை ஒரு மலரைப் போல வளர்க்கத் நாங்கள் விரும்புகிறோம்'' என்று உணர்வுப்பூர்வமாகக் கூறினார்.
அக்குழந்தையின் வருகை தங்கள் வீட்டிற்கு மகாலட்சுமியே வந்ததாகக் கருதுவதாகப் பாட்டி சுரேகா தஹிபாலே மகிழ்ச்சியுடன் தெரிவித்ததார். இது குறித்து கார்கியின் தந்தை கூறுகையில்,''மகளின் பிறப்பு குடும்பத்திற்கு ஒரு தனித்துவமான மகிழ்ச்சியைக் கொண்டுவந்துள்ளது.
பொதுவாக மக்கள் ஆண் குழந்தையைத்தான் விரும்புவார்கள். ஆனால், பெண் குழந்தையைப் பெற்றெடுப்பதில் உள்ள உணர்வும் மகிழ்ச்சியும் முற்றிலும் மாறுபட்டவை. பெண் குழந்தைகள் தங்கள் தந்தையிடம் அதிக நெருக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். நாங்கள் எங்கள் மகளை ஒரு மலரைப் போல வளர்ப்போம்," என்று அவர் கூறினார்.
குடும்பத்தினரின் இந்த செயலை சமூக ஆர்வலர் அனந்த் இங்கிளே போன்றவர்கள் வெகுவாக பாராட்டினர். சமூகத்தின் சில பகுதிகளில் பெண் குழந்தைகளின் பிறப்பு குறித்து இன்றும் நிலவும் குறுகிய மற்றும் பாரபட்சமான மனப்பான்மைகளுக்கு எதிராக, இது ஒரு முக்கியமான மற்றும் நேர்மறையான செய்தியை உணர்த்துவதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
இதற்கு முன்பு 2021ம் ஆண்டு ராஜஸ்தானின் நாகூர் மாவட்டத்தில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கள் குடும்பத்தில் பிறந்த முதல் பெண் குழந்தையான ரியா-வை வீட்டிற்கு அழைத்து வர, ஒரு குடும்பத்தினர் ஹெலிகாப்டர் ஒன்றை வாடகைக்கு அமர்த்தியிருந்தனர்.
மகாராஷ்டிராவின் பீட் மாவட்டம், சட்டவிரோத பெண் சிசுக்கொலை மற்றும் குழந்தைகளுக்கான பாலின விகிதத்தில் கடுமையான ஏற்றத்தாழ்வுகளை நீண்ட காலமாக சந்தித்து வருகிறது. 2011-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இம்மாவட்டத்தில் 1,000 சிறுவர்களுக்கு 801 சிறுமிகள் மட்டுமே இருந்தனர். இது மிகவும் கவலைக்குரிய நிலையாகும். கடுமையான சட்டங்கள் மூலம் இந்த எண்ணிக்கை தற்காலிகமாக மேம்பட்டிருந்தாலும், சமீபத்திய தரவுகள் பாலின விகிதம் மீண்டும் சரிந்து, 1,000 சிறுவர்களுக்கு சுமார் 865 சிறுமிகள் என்ற நிலையில் இருக்கிறது.





















