செய்திகள் :

'அங்கிருந்துதான் அதிருப்தி தொடங்கியது'; தவெக கூட்டத்தைப் புறக்கணித்த கம்யூனிஸ்ட்டுகள்- காரணம் என்ன?

post image

முதல்வர் விஜய் தலைமையில் கடந்த ஜூலை 1-ம் தேதி கோவளத்தில் தோழமை கட்சிகளுடனான முதல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தவிர காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல், மதிமுக ஆகிய கட்சிகள் பங்கேற்றன.

இந்நிலையில் 2-ம் கட்ட ஆலோசனைக் கூட்டம் தவெக தலைவரும், முதல்வருமான விஜய் தலைமையில் பனையூர் அலுவலகத்தில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற இருக்கிறது. கடந்த முறை ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்காத சிபிஎம், சிபிஐ கட்சிகளுக்கு இந்த முறையும் நேரில் சென்று தவெக அமைச்சர்கள் அழைப்பு விடுத்திருந்தனர்.

தவெக தோழமைக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம்
தவெக தோழமைக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம்

ஆனால் இந்த முறையும் தவெக தலைமையிலான ஆதரவு கட்சிகளுடனான கூட்டத்தில் பங்கேற்கவில்லை என கம்யூனிஸ்ட் கட்சிகள் தெரிவித்துள்ளன. கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்காததும், நேற்று (செப்.9) செய்தியாளர் சந்திப்பில், " காவல்துறை, தீயணைப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு முதல்வர் பதில் சொன்னாரா? அவர் பேசுவதற்கு நிறைய இடங்கள் இருக்கிறது.

சட்டமன்றத்தில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு கூட முறையாக பதில் சொல்லவில்லை. மிசாவில் கைது செய்யப்பட்டவர்கள் எல்லாம் சமூக விரோதிகள் என்று அமைச்சர் நிர்மல் குமார் சொல்வதெல்லாம் சிறுபிள்ளை தனம். மூன்று கோப்புகள் கையில் இருப்பதாக முதல்வர் சொன்னார். ஏன் அதைப் பற்றி பேசவில்லை?" என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தவெகவை சாடியிருந்ததும் அதிருப்தியில் இருக்கின்றனவா கம்யூனிஸ்ட் கட்சிகள்... என்ற கேள்வியை எழுப்புகிறது.

தவிர குஜிலியம்பாறை வட்டாட்சியர் இடதுசாரிகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுப்பதும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் எஸ்.எஃப்.ஐ, டி.ஒய்.எஃப்.ஐ போன்ற மாணவர்-இளைஞர் அமைப்புகளுக்குத் தடைகள் விதிக்கப்படுவதும் அவர்களுக்குக் கொதிப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் தவெக மீது அதிருப்தியில் இருக்கிறதா? கம்யூனிஸ்ட் கட்சிகள் என்ற கேள்வியோடு பத்திரிகையாளர் சுவாமிநாதனைத் தொடர்பு கொண்டு பேசினோம்.

நம்மிடம் பேசிய அவர், "இடதுசாரிகள் தமிழக வெற்றிக் கழகத்தை முதலில் ஆதரித்ததற்கு ஒரே காரணம், ஆளுநர் ஆட்சி வந்துவிடக் கூடாது, பாரதிய ஜனதா கட்சி எந்த வழியிலும் உள்ளே நுழைந்துவிடக் கூடாது என்பது மட்டுமே.

இதுவே அவர்களின் ஒற்றைக் குறிக்கோளாக இருந்தது. காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் போன்ற மற்ற கட்சிகள் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என நிபந்தனைகளை விதித்தன. ஆனால் இடதுசாரிகளுக்கு எந்த நிபந்தனையும் இருக்கவில்லை.

பத்திரிகையாளர் சுவாமிநாதன்
பத்திரிகையாளர் சுவாமிநாதன்

தற்போது இடதுசாரிகள் அதிருப்தியில் உள்ளனர். அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களைத் தம் பக்கம் இழுப்பதில் இருந்தே இந்த அதிருப்தி தொடங்கியது.

அகில இந்திய அளவில் மாநிலக் கட்சிகளை உடைக்கும் பாரதிய ஜனதா கட்சியின் செயலை இடதுசாரிகள் எவ்வாறு கண்டித்தார்களோ, அதே போன்றதொரு குற்றச்சாட்டையும் நெருக்கடியையும் தற்போது தவெகவும் எதிர்கொள்கிறது.

இரண்டாவதாக, குஜிலியம்பாறை வட்டாட்சியர் இடதுசாரிகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுப்பதும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் எஸ்.எஃப்.ஐ, டி.ஒய்.எஃப்.ஐ போன்ற மாணவர்-இளைஞர் அமைப்புகளுக்குத் தடைகள் விதிக்கப்படுவதும் அவர்களுக்குக் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

விவசாயிகள் கூட்டுறவுக் கடன் தள்ளுபடிப் போராட்டத்தில் இடதுசாரிகள் களத்தில் உள்ளனர். இடதுசாரி ஆதரவு பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தைக் கையிலெடுக்கும் போது, அரசோ அமைச்சர்களோ அவர்களை அழைத்துக்கூடப் பேசவில்லை. முந்தைய திமுக ஆட்சியில் இத்தகைய அணுகுமுறை அவர்களுக்குக் கிடைத்தது.

அரசதிகாரத்தில் பங்கு இல்லாததால் இடதுசாரிகள் எப்போதும் தம் கருத்துகளைச் சுதந்திரமாக வெளிப்படுத்துவார்கள். மாற்றுத்திறனாளிகள் போராட்டத்திலும் அவர்களின் குரல் செவிமடுக்கப்படவில்லை. இந்த அரசுக்கு வழங்கிய ஆதரவினால் மக்கள் நலன் சார்ந்த எந்தக் கோரிக்கைக்கும் தீர்வு கிடைக்கவில்லை. பாஜக ஆளும் மாநிலங்களைப் போல இங்கும் இடதுசாரிகளைக் கணக்கெடுப்பது அவர்களுக்கு மனக்குறையைத் தருகிறது.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

அகில இந்திய அளவில் 'இந்தியா' கூட்டணி என்பது தமிழ்நாட்டில் திமுக கூட்டணியாக உள்ளது; அதில் பாஜக எதிர்ப்புதான் முதன்மைப் புள்ளியாகும். இடதுசாரிகளுக்குக் கொள்கை ரீதியாக வலதுசாரித்துவமே முதன்மை எதிரியாகும். இதனால் பாஜக எதிர்ப்பில் தவெகவின் உறுதித்தன்மை குறித்து இடதுசாரிகள் ஐயுறுகின்றனர்.

ஐந்தாண்டுகள் ஆதரவு தருவோம் எனக் கூறிய இடதுசாரிகள், தற்போது 'எங்களின் ஆதரவு அவர்களின் செயல்பாட்டைப் பொறுத்தது' எனக் கூறுகின்றனர். முதலமைச்சர் மிசா சட்டம் குறித்துப் பேசுவதும், அவசரநிலை காலத்தைப் பற்றி அறியாத தவெகவின் நிலைப்பாடும் இடதுசாரிகளுக்கு கேள்விகளை எழுப்பியுள்ளன" என்றார்.

``நாடாளுமன்றம் கட்டவே ரூ.900 கோடி; சட்டமன்றம் கட்ட ரூ.1200 கோடியா?" - நயினார் நாகேந்திரன் கேள்வி!

பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நகேந்திரன் சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். அவர் பேசுகையில், ``சட்டமன்றத்தில் பொதுமக்கள... மேலும் பார்க்க

"சுயநல அரசியல் செய்துவரும் சீமான், நா.த.க-வின் சர்வாதிகாரி!" - கொதிக்கும் மு.களஞ்சியம்

நாம் தமிழர் கட்சியில் பயணித்துவந்த மு.களஞ்சியம், அண்மையில் அக்கட்சியிலிருந்து விலகினார். தொடர்ந்து தனது விலகலுக்கான காரணம் குறித்து அறிக்கையும் வெளியிட்டிருந்தார். ஆனாலும், வேறொரு கட்சியில் இணையாமலும்... மேலும் பார்க்க

BRICS மாநாடு: இந்தியா வரும் ஜி ஜின்பிங், புதின், ஈரான் அதிபர் மற்றும் இன்னும் பலர் - ஏன் முக்கியம்?

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பே பிரிக்ஸ். இந்த ஆண்டு பிரிக்ஸின் தலைமை சுழற்சி முறையில் இந்தியாவிற்கு வந்துள்ளது. இதையொட்டி வருகிற 12, 13 தேதிகளில் இந்தியா ப... மேலும் பார்க்க

'புதின் முயற்சி, தென்னாப்பிரிக்கா என்ட்ரி, மன்மோகன் சிங் யோசனை' - 'BRICS' கதையைப் பகிர்ந்த காங்கிரஸ்

வருகிற செப்டம்பர் 12, 13 தேதிகளில், BRICS மாநாடு புதுடெல்லியில் நடக்கவிருக்கிறது. இந்த ஆண்டு மாநாட்டை இந்தியா தலைமை தாங்கி நடத்துகிறது. இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின் உள்ளி... மேலும் பார்க்க

``ஆதவ் அர்ஜுனா முதல்வராகிவிடக் கூடாது என்ற பயத்தில்..." - முதல்வர் விஜய்யைச் சாடும் அப்பாவு

தமிழக முதல்வர் விஜய் இன்றிரவு லண்டனுக்குச் செல்லவிருக்கிறார். ஆனால், லண்டனில் அரசு முறையாக முதல்வர் யாரையெல்லாம் சந்திக்கிறார் என எந்தத் தகவலையும் தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்த நிலை... மேலும் பார்க்க

மிசா: `ஷா கமிஷன் அறிக்கை'; கைதிகள் பட்டியலில் `மிஸ்'ஸான ஸ்டாலின் பெயர் - ஏன்... என்னதான் நடந்தது?

தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல்வர் பதிலுரையின் போது, முதல்வர் விஜய், முன்னாள் முதல்வர் ஸ்டாலின் குறித்தும், அவர் மிசா சட்டத்தில் கைதுசெய்யப்பட்ட விவகாரம் குறித்தும் பேசினார். அப்போது அவரின் உடல்மொழி வி... மேலும் பார்க்க