அமெரிக்கா - ஈரான்: "ஹார்முஸ் நீரிணையை மீண்டும் மூடுவோம்" - ஈரான் எச்சரிக்கையின் பின்னணி என்ன?
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரித்துள்ள அதே வேளையில், ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய பதற்றம் உருவாகியுள்ளது.
அமெரிக்கா - ஈரான் போருக்கு மத்தியில் பாகிஸ்தானில் ஈரானுடனான அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது அமெரிக்கா. இது தொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்திடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ``தற்போது எந்தச் சிக்கல்களும் இல்லை. மிக விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும். இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஈரானில் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அமெரிக்காவிற்குக் கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

அதே நேரம், ''ஈரானின் யுரேனியத்தை நாட்டின் எல்லையைத் தாண்டி எங்கும் மாற்ற முடியாது'' என ஈரான் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
மேலும், ``அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகள் மற்றும் ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகை தொடர்ந்தால், உலக வர்த்தகத்தின் முக்கிய நீர்வழிப் பாதையான ஹார்முஸ் நீரிணையை மூடிவிடுவோம். இனி இந்தப் பாதையைக் கடக்க ஈரானின் அனுமதி தேவைப்படும்" என ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாஃப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் தலைமையிலான பல்தேசியப் படைகள் விரைவில் அப்பகுதிக்கு அனுப்பப்பட உள்ளன.
இந்தப் போர்ச் சூழலால் போயிங் (Boeing) நிறுவனம் போன்ற பாதுகாப்புத் தளவாடத் தயாரிப்பு நிறுவனங்களின் வருவாய் பல மடங்கு அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.











