''E20 பெட்ரோலால் வாகனச் செயல்திறன் பாதிக்காது; ஆனால்..." - நிதின் கட்கரியின் விள...
கன்னியாகுமரி மாவட்டம், திருப்பன்றிக்கோடு ஸ்ரீபக்தவத்சலேஸ்வரர்: தோல் வியாதி நீக்கும் வில்வ பிரசாதம்!
கன்னியாகுமரி மாவட்டத்தில் மகாசிவராத்திரியை ஒட்டி நடைபெறும் சிவாலய ஓட்டம் மிகவும் பிரசித்தம். அந்த ஓட்டத்தில் பக்தர்கள் 12 சிவாலயங்களை ஓடிச்சென்றே தரிசனம் செய்வார்கள்.
அப்படி அவர்கள் தரிசனம் செய்யும் 11வது கோயில் திருப்பன்றிக்கோடு ஸ்ரீபக்தவத்சலேஸ்வரர் மஹாதேவர் ஆலயம். நாகர் கோவிலில் இருந்து சுமார் 26 கி.மீ. தொலைவில் உள்ள இந்த ஆலயத்தின் சிறப்புகள் அநேகம்.
முகிலன் என்ற மன்னன் ஒருவன், பெரும்படையோடு வேணாட்டைத் தாக்கினான். ஆலயத்தைக் கொள்ளையிட்டதோடு திருப்பன்றிக்கோடு பக்தவத்சலேஸ்வரர் கோயிலை மூர்க்கமாகத் தாக்கினான். ஈசனின் திருமேனியை வாளால் வெட்டினான். பிறகு, ஆத்திரம் தீராமல் அருகில் இருந்த திருவட்டாறு ஆதிகேசப் பெருமாள் ஆலயத்தைத் தாக்க விரைந்தான்.

ஈசனை வாளால் வெட்டியபோது, அந்த லிங்கத் திருமேனியில் இருந்து ரத்தம் பீறிட்டது. அந்த ரத்தத் துளிகள் விஷ வண்டுகளாக மாறின. அவை, முகிலன் படை திருவட்டாறு கோயிலை அடையும் முன்பாகவே அவர்களைத் தாக்கின. படைகள் சிதறின. முகிலன் வண்டுகளின் தாக்குதலால் விஷம் ஏறிக் குதிரையில் இருந்து கீழே விழுந்து இறந்துபோனான். அதன்பின் அந்தப் பகுதிக்குப் போகவே யாரும் அஞ்சினர்.
திருப்பன்றிக்கோடு ஆலயம் பாழடைந்தது. அப்போது திருவிதாங்கூரின் மன்னராக இருந்தவர் ஸ்ரீமூலம் திருநாள் மகராஜா. ஒரு நாள் அவர் கனவில் தோன்றிய ஈசன், ``நான் மழையிலும் வெயிலிலும் நனைகிறேன். நீ சுகமாகத் தூங்குகிறாயா?'' என்று கேட்டார்.
மன்னர் திட்டுக்கிட்டு விழித்துக்கொண்டார். கனவில் தோன்றியவர் திருப்பன்றிக்கோடு பக்தவத்சலேஸ்வரர் என்பதை அறிந்து கொண்டார். மறுநாளே தன் படைகளோடு அந்த ஆலயத்துக்குச் சென்று இறைவனைத் தொழுது ஆலயத் திருப்பணிகளைத் தொடங்கினார். அன்று முதல் இன்றுவரை சீரும் சிறப்புமாக இயங்கிவருகிறது இந்த ஆலயம்.
மகாபாரதக் காலத்தில் நந்தியெம்பெருமான் பன்றி வடிவில் அர்ஜுனன் முன்பு செல்ல. அர்ஜுனன் அதை நோக்கி அம்பு எய்தான். அப்போது ஈசன் அங்கே வேடனின் ரூபம் தாங்கி வந்து, தானும் அம்பு எய்தார். இதனால் அர்ஜுனனுக்கும் ஈசனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு அது சண்டையானது.
ஒருகட்டத்தில் தன்னோடு சண்டையிடுபவர் ஈசன் என்பதை உணர்ந்த அர்ஜுனன், ஈசனின் திருவடிகளைப் பற்றித் தன்னை மன்னித்து அருள வேண்டினான். ஈசனும் மனம் மகிழ்ந்து ஆசி கூறி பாசுபதாஸ்திரத்தை அர்ஜுனனுக்கு வழங்கிய தலமும் இதுவே என்கிறார்கள்.

முன்புறம் சிறு குளம்... பெரிய மதில்கள். கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் பெரிய வாசல்கள் என பிரமாண்டமாக அமைந்துள்ளஹ்து கோயில். வெளிச்சுற்றுப் பிராகாரத்தின் தென்மேற்கு மூலையில் ஐயப்பனுக்கும் வடமேற்கு மூலையில் வள்ளி - தேவசேனா சமேத முருகப் பெருமானுக்கும் சந்நிதி அமைந்துள்ளது. வடகிழக்கில், அரசமரத்தடியில் நாகர் சந்நிதி அமைந்துள்ளது.
சிறிய வாசல் வழியாகக் கோயிலுக்குள் சென்றால், கூரையாக ஓடு வேயப்பெற்ற சுற்று மண்டபம் உள்ளது. கருவறைக்கு முன்பக்கமாக - 14 தூண்களுடன் ஓடு வேயப்பட்ட சதுர வடிவ நமஸ்கார மண்டபத்தில் நந்தி அமர்ந்து அருள்செய்கிறார்.
கன்னி மூலையில் கணபதி சந்நிதி, வடமேற்கு மூலையில் பார்வதி தேவி சந்நிதி ஆகியன அமைந்துள்ளன. இங்கு பார்வதி தேவி நின்றகோலத்தில் ஒரு கையில் தாமரையும், மறு கையில் அபய முத்திரையும் காட்டி அருள்கிறாள். வடக்குப்பகுதியில் மேற்கூரை இல்லாத சந்நிதியில் சண்டிகேஸ்வரரும், பக்கத்தில் சிறிய சந்நிதியில் பீடத்தின் வடிவில் சனீஸ்வரர் சந்நிதியும் அமைந்துள்ளன.
கேரள பாணியில் வட்ட வடிவத்தில் கருவறை வடிவமைக்கப்பட்டுள்ளது. கூம்பு வடிவத் தட்டு விமானக் கோபுரம் அற்புதம். இதன் கீழ் அடுக்குப்பகுதி கருங்கல்லாலும், மேலடுக்குப் பகுதி மரத்தாலும் வட்டவடிவில் நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளன.
இரண்டு அடுக்குகளாக தேக்குமரத்தில் கூரை அமைக்கப்பட்டு, அதில் செப்புத்தகடுகள் வேயப்பட்டுள்ளன. இரண்டு அடுக்கிலும் தொங்கு மேற்கூரை அமைக்கப்பட்டு, கருவறையின் மேற்பகுதியில் கலசமும் அமைக்கப்பட்டுள்ளது.

விமானக் கோபுரத்தில் கிழக்குப்பகுதியில் வெள்ளை யானையில் இந்திரனும், தெற்குப் பக்கம் தட்சிணாமூர்த்தியும், மேற்குப்பகுதியில் நரசிம்மரும், வடக்கில் பிரம்மாவும் வீற்றிருக்கின்றனர். இந்த நான்கு திருமேனிகளும் மரத்தாலானவை.
கருவறையில் ஈசன், லிங்கரூபமாகக் காட்சி அருள்கிறார். தரிசனம் செய்யும்போதே மனதில் ஈசனின் அருள் நிறைவதை உணரமுடியும். முகிலனால் வெட்டப்பட்ட தழும்புகளை ஈசனின் திருமேனியில் இன்றும் காணமுடியும். தினமும் காலை 6 மணிக்கு நடைபெறும் நிர்மால்ய தரிசனத்தின்போது பக்தர்கள் அந்தத் தழும்புகளைத் தரிசிக்கலாம்.
`இங்கு சுவாமியின் திருநாமம் பக்தவத் சலேஸ்வரர். அதற்கேற்ப பக்தர்களைத் தன்பால் ஈர்த்து அருள் செய்பவர் இந்த ஈசன். இங்குள்ள 3 கல்வெட்டுகளின் அடிப் படையில் தற்போதுள்ள இந்தக் கோயில் 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனத் தெரிய வந்துள்ளது.
இங்கு ஆகம விதிப்படி தினமும் காலையிலும் மாலையிலும் பூஜைகள் நடக்கின்றன. கார்த்திகை மாதம் அஷ்டமி தினத்தில் 10-ம் திருவிழா நடைபெறும் வகையில் திருக்கொடி ஏற்றப்பட்டு திருவிழா நடைபெறும். ஆடி மாதம் அனைத்து செவ்வாய் கிழமைகளிலும் பார்வதிதேவி சந்நிதியில் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன. கார்த்திகை 1-ம் தேதி தொடங்கி மண்டலபூஜை வரை ஐயப்பன் சந்நிதியில் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.
மகேஸ்வருக்கு நிவேத்தியமாக பால் பாயசம், தேங்காய் சேர்க்கப்பட்ட சர்க்கரைப் பாயசம், வெள்ளை சாதம் ஆகியவை நைவேத்யமாகப் படைக்கப்படுகின்றன. தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் நீங்க பக்தர்கள் ஜலதாரை, இளநீர் தாரை, நெய்தாரை செய்து வழிபடுகின்றனர்.
மேலும், வில்வம், துளசி இலைகளை அர்ச்சனை செய்து பிரசாதமாகப் பெற்றுச் செல்கிறார்கள் பக்தர்கள். அந்த இலைகளைத் தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்தால் தோல் சம்பந்தப்பட்ட நோய் தீருவதாக நம்பப்படுகிறது. திருமணம் கைகூட, திங்கள்கிழமைகளில் இங்கு சுயம்வர பார்வதி அர்ச்சனை செய்து வழிபடுகின்றனர்.
வாய்ப்பிருக்கும் அன்பர்கள் ஒருமுறை இந்த அற்புதமான கோயிலுக்குச் சென்று வாருங்கள். வாழ்க்கை வளமாகும் நலமாகும்.




















