``நான் யாரா? சுயமரியாதையுடைய இம்மண்ணின் மைந்தன்" - பிரவீன் சக்கரவர்த்திக்கு செல்...
கேரளம்: தொலைக்காட்சி அலுவலகத்துக்குள் புகுந்து நேரலையை முடக்கிய போலீஸ்; பினராயி விஜயன் கண்டனம்
கேரள மாநிலம் கொச்சியில் இயங்கி வரும் ‘ரிப்போர்ட்டர் டிவி’ தலைமை அலுவலகத்தில் இன்று அதிகாலை சுமார் 5:50 மணியளவில், திருக்காக்கரை உதவி ஆணையர் பினோய் சந்திரன் தலைமையில் லத்திகள் மற்றும் கேமராக்களுடன் போலீஸார் அதிரடியாக நுழைந்தனர்.
நியூஸ் ரூமுக்குள் புகுந்த அதிகாரிகள், அங்கு பணியில் இருந்த பெண் பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களின் செல்போன்களையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், களத்தில் இருக்கும் செய்தியாளர்களைத் தொடர்புகொள்வதற்காக நியூஸ் டெஸ்க்கில் வைக்கப்பட்டிருந்த அலுவலக தொலைபேசிகளையும் போலீஸார் பறித்துள்ளனர்.
போலீஸாரின் இந்த அதிரடி நடவடிக்கையால் செய்தி அறை முற்றிலும் முடங்கியது. இதன் காரணமாக வழக்கமான காலை நேர செய்தி அறிக்கையில் வெறும் இரண்டு செய்திகளை மட்டுமே ஒளிபரப்ப முடிந்ததாகவும், சுமார் 50 நிமிடங்களுக்கும் மேலாக தொலைக்காட்சியின் நேரலை செய்தி ஒளிபரப்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டதாகவும் ஊழியர்கள் தெரிவித்தனர்.
அதேபோல், நிறுவனத்தின் டிஜிட்டல் செய்திப் பிரிவுக்கும் சென்ற போலீசார், பணியில் இருந்த செய்தியாளர்களையும் வீடியோ எடிட்டர்களையும் நாற்காலிகளை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றியதுடன், அங்குள்ள கோப்புகள், ஆவணங்கள் மற்றும் குறிப்பேடுகளை அனுமதியின்றி புரட்டிப் பார்த்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
செய்தி அலுவலகம் மட்டுமின்றி, அந்நிறுவனத்தின் நிர்வாகப் பிரிவு பெண் ஊழியரின் வீட்டிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பத்திரிகை சுதந்திரத்தின் குரல்வளையை நெரிக்கும் வகையில் காவல் துறையினர் அதிகாலையிலேயே செய்தி அறைக்குள் நுழைந்து நடத்தியுள்ளதற்கு பத்திரிகையாளர் சங்கங்கள் பலத்த கண்டனம் தெரிவித்துள்ளன.

அதே சமயம் கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி கேரளத்தில் வர உள்ளதாகக்கூறி இந்தச் செய்தி நிறுவனம் பணம் வசூலித்ததாக போலீஸ் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதே சமயம் சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த கேரள மாநில சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயன் போலீஸாரின் நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பினராயி விஜயன் கூறியுள்ளதாவது, "ரிப்போர்ட்டர் டிவி தலைமை அலுவலகத்தின் செய்தி அறைக்குள் அத்துமீறி நுழைந்து, நேரலை செய்தி ஒளிபரப்பைத் தடுத்து நிறுத்திய கேரள காவல்துறையின் நடவடிக்கை மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
அதிகாலையில் கொச்சியிலுள்ள செய்தி அறைக்குள் ஒரு குழுவாகப் புகுந்த போலீசார், அங்கு பணியில் இருந்த பத்திரிகையாளர்களின் செல்போன்களை வலுக்கட்டாயமாகப் பறிமுதல் செய்தனர். சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக அங்கு அவர்கள் ஓர் அச்சுறுத்தும் சூழலை உருவாக்கினர். மேலும், பணியில் இருந்த பத்திரிகையாளர்களை காவல்துறையினர் தங்களது கேமராக்கள் மூலம் வீடியோவும் எடுத்துள்ளனர்.
காவல்துறையின் தரப்பிலிருந்து அரங்கேறிய இந்த அத்துமீறலானது எமர்ஜென்சி காலத்தை நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளது. பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களிலும், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லியிலும் ஊடகங்களுக்கு எதிராக நடத்தப்படும் அடக்குமுறைகளும் தாக்குதல்களும் தற்போது கேரளாவிலும் அரங்கேறியுள்ளன.

தொலைகாட்சி அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த கருவிகளைப் பறிமுதல் செய்து, அதன் ஆசிரியரை சிறையில் அடைத்த சம்பவத்திற்கு இணையான நடவடிக்கையே இங்கும் நடந்துள்ளது. ஊடகங்களின் வாயை அடைக்கும் இத்தகைய கொடூரமான அத்துமீறலை கேரளா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.
ஊடகங்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இந்த வெளிப்படையான தாக்குதலுக்கு முதலமைச்சரும், உள்துறை அமைச்சருமே உரிய பதிலளிக்க வேண்டும். பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிராக நடத்தப்பட்ட இந்த இழிவான, வெட்கக்கேடான தாக்குதலை மிக வன்மையாகக் கண்டிக்கிறேன்" என்றார்.















