‘எப்போதும் திறந்திருக்கும், எப்போதும் உங்களுக்காக'- மருத்துவ சேவையில் அப்பல்லோவி...
சபாநாயகர் விவகாரத்தில் பாஜகவுடன் உரசல்? - தென் மண்டல முதல்வர்கள் மாநாட்டை புறக்கணித்த ரங்கசாமி!
மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் தென்மண்டல முதல்வர்கள் மாநாடு நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த 2022-ம் ஆண்டுக்குப் பிறகு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த மாநாடு, இந்த ஆண்டு நடத்தப்படுகிறது. அதன்படி 31-வது தென் மண்டல முதல்வர்கள் மாநாடு மற்றும் ஆய்வுக் கூட்டம், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் மாமல்லப்புரம் கோவளத்தில் நேற்று தொடங்கியது.
இரண்டாவது நாளான இன்று தமிழ்நாடு, கேரளம், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் புதுச்சேரி முதல்வர்களின் மாநாடு நடைபெறுகிறது. புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால் முதல்வர் ரங்கசாமி மற்றும் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் இருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அதன்படி இன்று துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் கலந்து கொண்ட நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் முதல்வர் ரங்கசாமி புறக்கணித்திருக்கிறார். இந்த விவகாரம் தொடர்பாக நேற்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி வெளியிட்ட வீடியோ பேட்டியில், ``இந்த மாநாடு நமக்கு கிடைத்திருக்கும் நல்ல வாய்ப்பு.
அதில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு வலியுறுத்தலாம். ஆனால் நம் முதல்வர் ரங்கசாமிக்கு அந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்கு ஆர்வம் இல்லை. அதை புறக்கணிக்கப் போகிறார் என்ற தகவல் கிடைத்திருக்கிறது. துணைநிலை ஆளுநர் பங்கேற்றாலும், அவரால் பொதுவான பிரச்னைகள் குறித்து மட்டுமே பேச முடியும். மாநில பிரச்னைகளை முன் வைத்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க முதலமைச்சரால் மட்டுமே முடியும்.
கடந்த முறை நடைபெற்ற தென்மாநில முதலமைச்சர்கள் மாநாட்டிலும், பிரதமர் மாநாட்டிலும் முதல்வர் ரங்கசாமி கலந்துகொள்ளவில்லை. தனக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பை நழுவ விட்டுவிட்டு, புதுச்சேரியில் அமர்ந்துகொண்டு புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்று கேட்டால் மத்திய அரசு கொடுக்காது.
மாநில அந்தஸ்து பெற்றால்தான் புதுச்சேரியில் மக்கள் நலத்திட்டங்களை வேகமாக நிறைவேற்ற முடியும்” என்று தெரிவித்திருந்தார். அவர் கூறியது போல இன்று மாநாட்டை புறக்கணித்திருக்கிறார் முதல்வர் ரங்கசாமி. இந்த மாநாட்டில் கலந்துகொண்ட துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், புதுச்சேரியின் குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்ய அண்டை மாநிலங்களின் ஒத்துழைப்பு அவசியம்.

கோதாவரி இணைப்புத் திட்டத்தின் முதல் கட்டத்திலேயே குடிநீர், பாசனத்திற்காக கூடுதலாக நீர் திறக்க வேண்டும். குடிநீர் தேவைக்காக சாத்தனூர் அணையில் இருந்து புதுச்சேரிக்கு பிரத்யேக குழாய் அமைக்க வேண்டும். காரைக்காலுக்கு வரும் காவிரி நீரை சேமிக்க நீர்த்தேக்கத் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும்’ என்று பேசியிருக்கிறார்.
இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய என்.ஆர்.காங்கிரஸார், ``சபாநாயகர் பதவியை தங்களுக்கு வேண்டும் என்று கேட்டு வருகிறது பா.ஜ.க. ஆனால் முதல்வர் ரங்கசாமி அதை மறுத்து வருகிறார். அதனால் அந்தக் கோப்பை நிறுத்தி வைத்திருக்கிறார் ஆளுநர் கைலாஷ்நாதன். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவே எங்கள் முதல்வர் அதில் கலந்துகொள்ளவில்லை” என்றனர்.














