இடைத்தேர்தல்: "இடதுசாரிகள் தனித்துப்போட்டி என முன்பே சொல்லியிருந்தால்..." - சீமா...
நெல்லை: கொட்டித் தீர்த்த கனமழை; திறக்கப்படாத கொள்முதல் நிலையங்கள் - சேதமான நெல் மூட்டைகள்!
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பல மாதங்களாக வயலில் உழைத்து அறுவடை செய்த நெல்மணிகளை விற்பனை செய்வதற்காக விவசாயிகள் கொள்முதல் நிலையங்களை எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், குறிப்பிட்ட பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையங்கள் இன்னும் திறக்கப்படவில்லை. இதனால், அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாப்பான இடத்தில் சேமித்து வைக்க முடியாமல் விவசாயிகள் சிரமப்பட்டு வந்தனர்.

குறிப்பாக, அயன் சிங்கம்பட்டி, ஜமீன் சிங்கம்பட்டி, வைராவிகுளம், தெற்கு பாப்பாங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையங்கள் இதுவரை திறக்கப்படாததால், விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை வீடுகளின் முன்பாகவும், சாலையோரங்களிலும், திறந்தவெளியிலும் குவித்து வைத்திருந்தனர். இந்த நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் திடீரென கனமழை பெய்தது. மழைநீர் புகுந்ததுடன், திறந்தவெளியில் குவித்து வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் முழுவதுமாக நனைந்து சேதமடைந்தன.
இதுகுறித்து விவசாயிகளிடம் பேசினோம், “நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது நெல் அறுவடைக் காலம். அறுவடை முடிந்து வீடுகளின் முன்பு குவித்து வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மட்டுமின்றி, ஏற்கனவே விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு கொள்முதல் நிலையங்களை எதிர்பார்த்து வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளும் மழையில் நனைந்துள்ளன. இதனால் நெல்லின் தரம் பாதிக்கப்படுவதுடன், ஈரப்பதம் அதிகரித்து எடை குறையும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

மேலும், நனைந்த நெல்லை உடனடியாக உலர்த்த முடியாத நிலையில், தொடர்ந்து மழை பெய்தால் நெல் முளைத்து, விற்பனைக்கு தகுதியற்றதாக மாறும். ஏற்கனவே விதை, உரம், பூச்சிக்கொல்லி மருந்து, விவசாய கூலி உள்ளிட்ட பல்வேறு செலவுகளை செய்து அறுவடை செய்த நெல், கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால் திறந்தவெளியில் வைக்கப்பட்டு, தற்போது மழையிலும் நனைந்து சேதமடைந்திருப்பது விவசாயிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சேதத்தால் விவசாயிகளின் பொருளாதார நெருக்கடியை மேலும் அதிகரித்துள்ளது. சேதமடைந்த நெல் மூட்டைகளை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் அல்லது இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றனர். இதுகுறித்து அம்பாசமுத்திரம் வட்டார வேளாண் அதிகாரிகள் தரப்பில் பேசினோம், “நெல் கொள்முதல் நிலையங்களை செயல்படுத்துவதற்குத் தேவையான இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இன்னும் ஓரிரு நாட்களில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் தொடங்கும்.” என்றனர். ஆனால், அதற்குள் மீண்டும் மழை பெய்தால் மேலும் பல நெல் மூட்டைகள் சேதமடையும் அபாயம் உள்ளதால், காலதாமதமின்றி கொள்முதல் நிலையங்களை திறந்து நெல் கொள்முதலை தொடங்க வேண்டும் என்பதே விவசாயிகளின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.




















